ETV Bharat / city

திருச்சியில் பாரம்பரிய முறையில் ஜல்லிக்கட்டு வேண்டும் - மனு அளித்த ஜல்லிக்கட்டுப்பேரவை நிர்வாகிகள்

author img

By

Published : Oct 11, 2021, 6:36 PM IST

திருச்சியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு
திருச்சியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு

பாரம்பரிய முறையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக் கோரி திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் ஜல்லிக்கட்டுப் பேரவைத் தலைவர் உள்ளிட்டோர் மனு அளித்துள்ளனர்.

திருச்சி: ஜல்லிக்கட்டுப் பேரவைத் தலைவர் கூத்தைப்பார் தன்ராஜ், துணைத் தலைவர் திருச்சி ஜி.ஆர். சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது பாரம்பரிய முறையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக் கோரி மனு அளித்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.ஆர். சிவா, 'பாரம்பரிய முறையில் வேஷ்டி, சாப்பாடு, வாடகைப்படி போன்றவை மட்டும் வழங்கி, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும். இதனால் வசதி படைத்தவர்கள் மட்டுமின்றி ஏழை, எளிய அனைத்துத் தரப்பு மக்களின் ஜல்லிக்கட்டுக் காளைகளும், இந்த முறை போட்டியில் கலந்துகொள்ள முடியும்.

எளிய முறையில் ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கும் முறை தேவையில்லை. எளிய முறையில் நடத்த வேண்டும்.

திருச்சி மாவட்டத்தில், நடைபெறும் இந்தப் போட்டியில் 700 பேர் கலந்துகொண்டு, ஒரு பிரிவுக்கு 200 வீரர்கள் வீதம் பங்குபெற்று காளைகளை அடக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். ஆகையால், எங்களுக்கு உரிய அனுமதி வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அவர் பரிசீலனை செய்வதாகத் தெரிவித்துள்ளார்' எனத் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு நடக்க வாய்ப்புள்ளது

இது குறித்து கால்நடைத் துறை கண்காணிப்பாளர் ஜோசப் கூறுகையில், 'திருச்சி மாவட்டத்திலுள்ள 10 கிராம மக்கள், இதுவரை ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிகோரி, ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். வழக்கமாக, சில மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறும்.

இதுதவிர அந்தந்த ஊர் திருவிழா நடக்கும்போது, ஜல்லிக்கட்டு நடத்துவது பாரம்பரியமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

இவர்கள் தான் தற்போது அனுமதி கோரியுள்ளனர். கடந்தாண்டு கரோனா காரணமாக, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்படவில்லை.

ஆனால், இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. ஜல்லிக்கட்டு நடத்த விரும்புபவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை அமலில் உள்ளது.

இந்த வகையில் பலரும் விண்ணப்பித்து வருகின்றனர். அதனால் திட்டமிட்டபடி இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன' என்றார்.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டில் இனி நாட்டு மாடுகள்: நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.