நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் - மா சுப்பிரமணியன்

author img

By

Published : Aug 9, 2021, 11:08 PM IST

Minister subramanian pressmeet
Minister subramanian pressmeet ()

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

திருச்சிராப்பள்ளி: அரசு மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, உடல் உறுப்பு மாற்றம் மற்றும் அறுவை சிகிச்சை செய்த நோயாளிகளை பார்வையிட்டனர்.

பின்னர் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவுகளை ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவிய கொடையாளரின் குடும்பத்திற்கு நினைவுக் கேடயம், காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், செவிலியர்கள் குழுவை கௌரவித்தார். அமைச்சர் கே.என்.நேரு ரூ.14 லட்சம் மதிப்புள்ள் ஐசிஐசிஐ அறக்கட்டளை மூலம் வந்த ஆர்டிபிசிஆர் கருவியை மருத்துவமனை முதல்வரிடம் வழங்கினார்.

திருச்சி பிளைவுட் மட்டும் ஹார்டுவேர்ஸ் விற்பனையாளர்கள் சங்கம் சார்பாக ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள ஆழ்துளை குழாய் கிணறு
அமைத்துக் கொடுத்த நபர்களை கௌரவித்தார். பின்னர் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ரூ.3 கோடி மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை திருச்சி மாவட்ட கரோனா தடுப்பு பொறுப்பாளர் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சமூகப் பொறுப்புகளுடன் கார்ப்பரேட் நிறுவனங்கள் பங்களிக்கும் 2 ஆயிரம் நபர்களுக்கான தடுப்பூசி போடும் நிகழ்வினை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வுகளின் போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நாள்தோறும் 3 லட்சம் முதல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. 17 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே தனியார் மருத்துவமனைகள் சார்பில் போட்டுள்ளனர். மருத்துவமனைக்கு என்ன தேவை, எந்தெந்த துறைகளில் மருத்துவர்கள் தேவை என்பது குறித்து கேட்டுள்ளோம் கண்டிப்பாக அதனை நிரப்ப நடவடிக்கை எடுப்போம்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் நீட் தேர்விற்காக குறைந்த அளவில் மட்டுமே பதிவு செய்துள்ளனர் என்ற கேள்விக்கு, இன்னும் கூட கால அவகாசம் உள்ளது. மாணவர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

தேர்வுக்கு முன்பாக இன்னும் ஏராளமான மாணவர்கள் கண்டிப்பாக தேர்வுக்கு தயாராவார்கள். கரோனா காலகட்டத்தில் பணியாற்றிய தற்காலிக ஊழியர்களுக்கு பணி வழங்குவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம், யாருக்கெல்லாம் பணி வழங்க முடியுமோ அவர்களுக்கு கண்டிப்பாக வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி முதல்வர் வனிதா, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், சட்டப்பேரவை உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், இனிக்கோ இருதயராஜ், கதிரவன், அப்துல் சமத் ஆகியோருடன் சுகாதாரத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.