திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே காடையூரைச் சேர்ந்தவர் சேனாபதி (56). இவருக்கும் காங்கேயம் பசுவமூப்பன்பாளையத்தைச் சேர்ந்த கணேஸ்வரன், பொன்னுசாமி, மகுடபதி, அருணாசலம் ஆகியோருக்கு இடையே பல்வேறு பிரச்னைகளில் கருத்து வேறுபாடு இருந்துள்ளது.
இந்த நேரத்தில் 2007ஆம் ஆண்டு, நான்கு பேரும் சேர்ந்து சேனாபதி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துதாக்குதல் நடத்தி கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இது குறித்து இரு தரப்பினரும் காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரை விசாரிக்கக் காவல் துறையினர் தாமதப்படுத்தியதால் சேனாபதி திருப்பூர் நீதிமன்றத்தில் தனிமனு தாக்கல் செய்திருந்தார்.
முடியாத வேலைக்கு 10 கோடி ரூபாய் கட்டணமாம் - விசாரணை நடத்த முதல்வர் உத்தரவு
அத்தனி மனுவை விசாரணை செய்த நீதிமன்றம், காங்கேயம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. அதன் பேரில் காங்கேயம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கணேஸ்வரன், பொன்னுசாமி, மகுடபதி, அருணாசலம் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கானது நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி சுந்தர் ராஜ் குற்றவாளிகளான கணேஸ்வரன், பொன்னுசாமி, மகுடபதி, அருணாசலம் ஆகிய நான்கு பேருக்கும், அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த குற்றத்திற்காக ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையும், கொலை முயற்சி செய்த குற்றத்திற்காக ஏழு ஆண்டு சிறைத் தண்டனையும், ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.
மேலும் தலா ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். பின்னர் இவர்கள் நான்கு பேரையும் காவல் துறையினர் கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர்.