மனைவிக்குத் தெரியாமல் புதுமணம் - கணவனை சேர்த்து வைக்க குழந்தையுடன் பெண் தர்ணா!

author img

By

Published : Dec 6, 2021, 9:54 PM IST

Updated : Dec 6, 2021, 10:36 PM IST

women harassment, tuticorin extra marital affair case, tuticorin crime news, tuticorin news, தூத்துக்குடி செய்திகள், திருமணத்தை மீறிய உறவு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தூத்துக்குடி பெண் தர்ணா, கோவில்பட்டி மாரியம்மாள்

பணத்திற்கு ஆசைப்பட்டு பள்ளி ஆசிரியர் 2ஆவது திருமணம் செய்துகொண்டதை எதிர்த்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதல் மனைவி குழந்தையுடன், ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். முறையாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறி காவல் துறையினர் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

தூத்துக்குடி: கோவில்பட்டியைச் சேர்ந்த ராமசாமியின் மகள் மாரியம்மாளுக்கும் (32), கோவில்பட்டி அருகில் உள்ள காட்டுராமன்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியருக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மாரியம்மாளுடன் பேச்சுவார்த்தையை தவிர்த்து வந்த அவரது கணவர் லட்சுமணன், மனைவிக்கு தெரியாமலேயே இரண்டாவதாக நித்யா எனும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதாகத் தெரிகிறது.

மனைவிக்குத் தெரியாமல் புதுவீடு

இது குறித்து அறிந்த மாரியம்மாள், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவர் லட்சுமணன், மாமனார் கிருஷ்ணன், மாமியார் சிந்தா, கணவரின் இரண்டாவது மனைவி நித்யா, அவரின் பெற்றோரான கருப்பசாமி, பூப்பாண்டியம்மாள் உள்ளிட்டோர் மீது புகாரளித்தார்.

ஆனால், அவரது புகாரின் மீது காவல் துறையினர் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு, ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக வந்தார்.

இவ்வேளையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு திடீரென குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவரை எவ்வளவோ அப்புறப்படுத்த முயன்றும், மாரியம்மாள் தனது புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும் வரை இவ்விடத்தை விட்டு நகரப்போவதில்லை எனக் கூறி தொடர் தர்ணாவில் ஈடுபட்டார்.

கணவனை மீட்டுத்தர தர்ணா

போராட்டம் முடிவுக்கு வராத நிலையில், மகளிர் காவலர்கள் அவரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று, காவல் துறை விசாரணை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரிடம் விசாரணை நடத்திய காவல் துறையினர், மாரியம்மாளின் புகாரின் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் செய்வதாக உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து அவர் போராட்டத்தைக் கைவிட்டு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

இது குறித்து மாரியம்மாள் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எனது கணவர் கோவில்பட்டியில் முத்துக்கருப்பன் நினைவு அரசுப் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் எனது கணவர், அதே பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றும் நித்யா என்ற பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்துள்ளார்.

புகார் அளித்தும் பலனில்லை

இந்த விஷயம் எனக்கு வெகு நாட்களுக்குப் பிறகே தெரியவந்தது. தற்போது எனது கணவரின் இரண்டாவது மனைவி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததுமே, நான் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவர் மீதும், இரண்டாவது திருமணம் செய்ய உடந்தையாக இருந்தவர்கள் மீதும் புகாரளித்தேன்.

ஆனால் எனது புகார் மீது காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மனம் நொந்த நான், இன்று மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து முறையிட வந்தேன். இருந்தபோதும் இந்த விவகாரத்தில் தீர்வு கிடைக்கவேண்டும் என்பதால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டேன்.

வரதட்சணை கோரும் மாமனார்

எனது கணவருக்கு, இரண்டாவது திருமணம் செய்து வைத்தது குறித்து எனது மாமனாரிடம் நான் கேட்டபோது, "அதிகப் பணம் கொண்டு வந்தால், சரி செய்து வைக்கிறேன்" எனக் கூறுகிறார். என்னாலோ, எனது குடும்பத்தினரலோ அவர்கள் கேட்கும் அளவிற்குப் பணம் தர முடியாது.

தற்பொழுது கணவரைப் பிரிந்து வாழ்ந்து வரும் எனக்கும், எனது குழந்தைக்கும் சாப்பாடு கொடுக்க மட்டுமே எனது தந்தைக்கு வருமானம் சரியாக உள்ளது. எங்களிடம் பெரிய தொகையை எதிர்பார்க்கும் அவர்களுக்கு, எங்களால் எதுவும் செய்ய இயலாது.

கணவனைச் சேர்த்து வைக்க குழந்தையுடன் தர்ணாவில் ஈடுபட்ட மாரியம்மாள் பேட்டி

என்னைத் திருமணம் செய்து கொடுக்கையில், 20 சவரன் நகையை வரதட்சணையாக கொடுத்தனர். அதில் 10 சவரன் நகையை எனது கணவர் குடும்பத்தினர் விற்றுவிட்டனர். மீதி 10 சவரன் நகையை அடமானம் வைத்து செலவு செய்துள்ளனர்.

இதன் பிறகும் அவர்கள் பணம் கேட்பது எதற்காக எனத் தெரியவில்லை. முதல் மனைவி நான் உயிருடன் இருக்கும்போதே, என்னுடைய சம்மதம் இல்லாமல் எனது கணவர் இரண்டாவது திருமணம் செய்தது என்னை வேதனை அடையச் செய்துள்ளது. எனவே, எனக்கு உரிய நீதி தேடித் தர வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: என்னை ஏமாத்திட்டான் - காதலன் மீது பிக்பாஸ் ஜூலி புகார்

Last Updated :Dec 6, 2021, 10:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.