தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாகப் பெய்த, தொடர் கனமழையின் காரணமாகப் பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் பல்வேறு இடங்களில் மழை நீரானது, குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாகக் குடியிருப்புகளைச் சுற்றியுள்ள மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த மழைநீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் முதலமைச்சர் இன்று (டிச.2) மதியம் தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ளப் பகுதிகளை நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதற்காக இன்று மதியம் தூத்துக்குடி விமான நிலையம் வந்து இறங்கிய அவர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு தூத்துக்குடி பிரையண்ட் நகர்ப் பகுதியைப் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் கூடியிருந்த பொதுமக்களிடம் மழை வெள்ளப் பாதிப்பு குறித்த குறைகளைக் கேட்டறிந்தார்.
மீட்புப் பணிகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை
இதனையடுத்து, தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் வெள்ள மீட்புப் பணிகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
அதன்பிறகு, விவசாயிகளைச் சந்தித்து மனுக்களைப் பெற்ற மு.க.ஸ்டாலின், சாலை வழியாகத் தூத்துக்குடி மாநகராட்சி அம்பேத்கர் நகர்ப் பகுதியைப் பார்வையிட்டார்.
மழைக்கால நிவாரண உதவி
அதன் பின்னர், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 3 ஆயிரம் பேருக்கு மழைக்கால நிவாரண உதவிகளை வழங்கினார்.
அதனையடுத்து முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர் ஆகியப் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது. அதனை முதலமைச்சர் பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: Omicron variant: ஒமைக்ரான் வைரஸின் அறிகுறிகள் என்ன... அதிலிருந்து தப்பிக்க வழிகள் என்ன?