ETV Bharat / city

உள்ளாட்சித் தேர்தல்: நெல்லையில் அமைதியாக நடந்து முடிந்த வாக்குப்பதிவு

author img

By

Published : Oct 7, 2021, 8:42 AM IST

tirunelveli local body election poll
tirunelveli local body election poll

திருநெல்வேலியில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்தது. வாக்குப்பெட்டிகள் முகவர்கள் முன்னிலையில் சீல்வைக்கப்பட்டன. கடைசி நேரத்தில் வாக்காளர்கள் கூட்டமாகத் திரண்டதால் பல்வேறு மையங்களில் வாக்குப்பதிவு முடிவதில் தாமதம் ஏற்பட்டது.

திருநெல்வேலி: ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள ஆயிரத்து 113 பதவிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிந்தது. ஆனால் பல்வேறு வாக்குச்சாவடிகளில் மாலை 5 மணிக்கு மேல் கடைசி நேரத்தில் வாக்காளர்கள் கூட்டமாகத் திரண்டதால், அவர்களால் 6 மணிக்குள் வாக்களிக்க முடியவில்லை.

எனவே டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் மட்டும் மாலை 6 மணிக்கு மேல் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் பல மையங்களில் வாக்குப்பதிவு முடிவதில் தாமதம் ஏற்பட்டது. மாலை 3 மணி வரை 52.01 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்தன. இறுதிகட்ட வாக்குப்பதிவு முடிவுகள் வருவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு முடிவுபெற்ற வாக்குச்சாவடிகளில் வாக்குப் பெட்டிகள் சீல்வைக்கும் பணிகள் முடிந்தது. முன்னதாக அலுவலர்கள் வைத்துள்ள பூத் ஸ்லிப் படிவத்திலும், முகவர்கள் வைத்துள்ள படிவத்திலும் வாக்களித்தவர்களின் எண்ணம் ஒத்துப்போகிறதா என்று சரி பார்த்த பின்னர், முகவர்கள் முன்னிலையில் வாக்குச்சாவடி தேர்தல் அலுவலர் மேற்பார்வையில் வாக்குச்சீட்டுகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள் சீல்வைக்கப்பட்டன.

தொடர்ந்து தேர்தல் நடத்தும் உதவி அலுவலரின் ஒப்புதல் பெற்ற பிறகு, சீல்வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள் பலத்த காவலர்கள் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் தலா ஒரு வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் வி.கே. புரம் அமலி மேல்நிலைப்பள்ளிக்கும், சேரன்மகாதேவி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் சேரன்மகாதேவி பெரியார் மேல்நிலைப் பள்ளிக்கும், மானூர் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் பழைய பேட்டை ராணி அண்ணா கல்லூரிக்கும், பாளையங்கோட்டை ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் கொங்கந்தன்பாறை ரோஸ்மேரி கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கும் எடுத்துச் செல்லப்பட்டன.

அங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவல் துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். தொடர்ந்து, மாவட்டத்தின் களக்காடு, ராதாபுரம், நாங்குநேரி, வள்ளியூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு அக்டோபர் 9ஆம் தேதி இரண்டாம் கட்டமாகத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: செல்ஃபோன் பேசிக்கொண்டு வாக்களிக்க வந்த நபர் - காவல் துறையினருடன் வாக்குவாதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.