திருநெல்வேலி: நெல்லை மாவட்ட கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள இளைஞர் நலத்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் முதன்மைச்செயலாளர் அபூர்வா ஐஏஎஸ் இன்று நெல்லையில் பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதன் அடிப்படையில் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானம் சீர்மிகு நகரத்திட்டத்தின்கீழ் நவீனப்படுத்தப்பட்டுள்ளதை அவர் பார்வையிட்டார். தொடர்ந்து உள் விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சிக்கூடம் ஆகியவற்றையும் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அண்ணா விளையாட்டு அரங்கம் சென்ற அவர் அங்குள்ள ஹாக்கி மைதானம், தடகளப்போட்டி மைதானம் மற்றும் இறகு பந்து விளையாட்டு மைதானங்களைப் பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 'வடகிழக்குப் பருவமழை வர உள்ள நிலையில் கடந்தாண்டு ஏற்பட்ட மழையின்போது பெற்ற அனுபவத்தின் அடிப்படையில், பல்வேறு முன் ஏற்பாடு பணிகள் நெல்லையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, இந்த ஆண்டு மழையின் போது ஏற்படும் வெள்ளம் மற்றும் மழை நீர் உடனடியாக வடிந்துவிடும்.
சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் நெல்லை மாநகரப்பகுதியில் நடந்து வரும் பணிகள் பெரும்பாலானவை முடிந்துவிட்டன. நெல்லைச்சந்திப்பு பேருந்து நிலையத்தைப்பொறுத்தவரை கனிம வளம் அள்ளப்பட்டது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் அது முடிந்த பின்பு விரைவாக பணிகள் மேற்கொள்ளப்படும்’ எனத் தெரிவித்தார்.