சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள செல்லியம்பாளையத்தில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, அதிமுகவினர் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில், "சேலம் மாவட்டத்தின் 14ஆவது தாலுக்காவாக தலைவாசல் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டுவருகிறது. திமுக ஆட்சிகாலத்தில் கடுமையான மின்வெட்டு நிலவியது. ஜெயலலிதா ஆட்சியிலிருந்து தற்போது வரை 17 மருத்துவ கல்லூரிகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. மின்மிகை மாநிலமாக திகழ்கிறது தமிழ்நாடு.
நான் மந்திரவாதி அல்ல; செயல்வாதி. ஸ்டாலின் கூறுவது போல் நான் மந்திரவாதியாக இருந்திருந்தால், அவர் பேசியிருக்கவே மாட்டார். தப்பு செய்தவரை தட்டிக்கேட்டால்தான் தலைவன்; தட்டிக்கேட்காமல் கட்டப்பஞ்சாயத்து செய்தவர் ஸ்டாலின். அவர் தமிழ்நாட்டிற்கு தேவையா? நாட்டுமக்களை பற்றி சிந்திக்காமல் வீட்டு மக்களைப்பற்றி சிந்திக்கும் ஸ்டாலினுக்கு நாட்டு நடப்புகள் தெரிவதில்லை” என்றார்.
மேலும், “தமிழ்நாட்டில் ஒரு போது ஸ்டாலின் ஆட்சிக்கு வரமுடியாது. திமுக கட்சி ஒரு அராஜக கட்சி, ரவுடி கட்சி. ஸ்டாலின் போன்ற கட்டப்பஞ்சாயத்து செய்யும் தலைவர் மக்களுக்கு தேவையா என்பதை மக்கள் யோசித்து பார்க்க வேண்டும்” எனக் கடுமையாக சாடினார்.
இதையும் படிங்க...அதிமுகவைக் காக்க விளக்கேற்றி உறுதிமொழி எடுங்கள் - ஓபிஎஸ், ஈபிஎஸ் கடிதம்