சேலம்: ஓமலூர் அடுத்த தாரமங்கலம், அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநராகப் பணியாற்றி வருபவர் பரமசிவம்.
இவர் சேலத்திலிருந்து திருவாரூர் செல்லும் வழித்தடத்தில் பேருந்து ஓட்டுநர் பணி செய்ய, தாரமங்கலம் பணிமனை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளரும், நடத்துனருமான குணசேகரன் என்பவர் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்டு வற்புறுத்தி உள்ளார்.
குணசேகரன் திமுக பிரமுகர் என்பதால் பரமசிவம் செய்வதறியாமல் மன உளைச்சலிலிருந்து வந்தார். இந்த நிலையில், ஓட்டுநர் பரமசிவம் சேலம் லஞ்ச ஒழிப்பு காவலர் குணசேகரன் தன்னிடம் ஓட்டுநர் பணி செய்ய லஞ்சம் கேட்டது தொடர்பாக புகார் செய்தார்.
புகாரின்பேரில் சேலம் லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் நரேந்திரன் நடவடிக்கை மேற்கொண்டார். ஆய்வாளர் ஆலோசனையின்படி, பரமசிவம், லஞ்சப் பணம் ரூ.5 ஆயிரத்தை குணசேகரனிடம் தாரமங்கலம் பேருந்து பணிமனையில் வழங்கினார்.
அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும், களவுமாக குணசேகரனை கைது செய்தனர். இதுதொடர்பாக, சேலம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், திமுக பிரமுகரை கைது செய்தது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: லதா மங்கேஷ்கருக்கு கரோனா பாதிப்பு!