ETV Bharat / city

ஹஜ் யாத்திரைக்கு சென்னையில் புறப்பாடு மையம் தேவை - சு.வெங்கடேசன் எம்.பி.

author img

By

Published : Nov 6, 2021, 5:51 PM IST

ஹஜ் யாத்திரை செல்லும் பயணிகளுக்காக, சென்னையில் புறப்பாடு மையம் தேவை என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளார்.

ஹஜ் யாத்திரைக்கு சென்னையில் புறப்பாடு மையம் தேவை
ஹஜ் யாத்திரைக்கு சென்னையில் புறப்பாடு மையம் தேவை

மதுரை: இதுகுறித்து ஒன்றிய சிறுபான்மை நல அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்விக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “கரோனா காரணமாக ஹஜ் புறப்பாடு மையங்கள் (Embarkation Centres) 21- இல் இருந்து 10-ஆக கடந்த ஆண்டு குறைக்கப்பட்டது.

2022 ஆம் ஆண்டில் 10 மையங்களே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவை டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், அகமதாபாத், பெங்களூரு, கவுகாத்தி, லக்னோ, ஸ்ரீநகர், கொச்சி ஆகியன ஆகும். தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் பயணிகள் கொச்சியில் போய் ஏற வேண்டும். இதனால் ஆயிரக்கணக்கானோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார்கள்.

1987- இல் இருந்து சென்னையில் புறப்பாடு மையம் இருந்து வந்துள்ளது. சென்னையில் இப்பயணிகள் ஓய்வு எடுத்து செல்வதற்கான ஹஜ் இல்லம் இருக்கிறது. இதை தமிழ்நாடு ஹஜ் குழுவும், ஹஜ் சேவை அமைப்பும் ஏற்படுத்தி வைத்துள்ளன.

கரோனா காரணம் சொல்லப்பட்டுள்ளது. இம்முடிவு எடுக்கப்பட்டுள்ள நேரத்தில், கேரளாவில் கரோனா தொற்று அதிகமாக உள்ளது. நவம்பர் 3 ஆம் தேதி மட்டும் 7545 புதிய தொற்றுகள். ஹஜ் பயணம் மேற்கொள்ளப்படும் நேரத்தில் நிலைமை என்னவாக இருக்கும் என கணிக்க இயலாது.

கரோனா சூழலில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் பயணிகள் குறிப்பாக மூத்த பயணிகளை அலைய விடுவது சரியல்ல. ஆகவே புறப்பாடு மையங்கள் பற்றிய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். சென்னை சேர்க்கப்பட வேண்டும்” என அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க:4 கால் பிராணி போல் தவழ்ந்து வந்து பதவி பெற்றவர் யார்? - டிடிவி தினகரன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.