ETV Bharat / city

தந்தை-மகன் மரண வழக்கு: 9 காவலர்கள் மீது கூட்டுச்சதி பிரிவில் வழக்குப்பதிய கோரி மனு

author img

By

Published : Jul 12, 2021, 8:58 PM IST

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் ஸ்ரீதர் உள்பட ஒன்பது காவலர்கள் மீது 120 பி (கூட்டுச்சதி), விடுபட்ட பிரிவுகளின்கீழ் குற்றச்சாட்டுகளைப் பதிவுசெய்ய கோரிய வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்துள்ளது.

sathankulam murder
sathankulam murder

மதுரை: சிபிஐ கூடுதல் கண்காணிப்பாளர் (ஏடிஎஸ்பி) உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல்செய்திருந்தார். அதில், "சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் 2020 ஜூன் 19ஆம் தேதி சாத்தான்குளம் காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பின்னர் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள், சிறப்பு சார்பு ஆய்வாளர், காவலர்கள் என ஒன்பது பேர் மீது சிபிஐ கொலை வழக்குப் பதிந்தது. இந்த வழக்கு மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. 2020 செப்டம்பர் 25இல் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்செய்தது.

குற்றச்சாட்டுப் பதிவின்போது ஸ்ரீதர் உள்ளிட்ட ஒன்பது பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 120 பி (கூட்டுச் சதி) பிரிவில் குற்றச்சாட்டுகளைப் பதிவுசெய்ய நீதிமன்றம் மறுத்தது. இது தொடர்பாக சிபிஐ தாக்கல்செய்த மனு தள்ளுபடிசெய்யப்பட்டது.

இந்தப் பிரிவுகளில் குற்றம் புரிந்தமைக்குப் போதிய ஆதாரங்கள் உள்ளன. குற்றவாளிகள் அனைவரும் காவல் துறையைச் சேர்ந்தவர்கள், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உரிய குற்றப்பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவுசெய்யாததை விசாரணை இறுதியில் குற்றவாளிகள் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது. ஸ்ரீதர் உள்பட ஒன்பது பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 120 பி பிரிவிலும், மற்றவர்கள் மீது விடுபட்ட பிரிவுகளின்கீழ் குற்றச்சாட்டுகளைப் பதிவுசெய்ய உத்தரவிட வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது கைதுசெய்யப்பட்டு சிறையிலுள்ள காவலர்கள் தாமஸ்பிரான்சிஸ், முத்துராஜா தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல்செய்யப்பட்டது. மேலும் சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்ற காவலர்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் சென்று சேரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.