ETV Bharat / city

'ஒமைக்ரான் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தாது'- ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி மாரியப்பன்

author img

By

Published : Dec 7, 2021, 7:19 PM IST

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில்
ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி மாரியப்பன்

கரோனாவின் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதுடன், 3ஆவது அலைக்கும் வாய்ப்பை உருவாக்காது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் முன்னாள் விஞ்ஞானி மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

மதுரை: இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் முன்னாள் விஞ்ஞானி மாரியப்பன் தெரிவித்திருப்பது, ”பல்வேறு வகையான உருமாறிய கரோனா வைரஸ்களில் ஒமைக்ரான் வைரஸூம் ஒன்றாகும்.

இதனை முதன் முதலாக புதிய உருமாறிய வைரஸ் என்றும் பி11529 என்றும் பெயரிட்டு, தென் ஆப்பிரிக்காவிலுள்ள போட்ஸ்வானாவில் கண்டறிந்து உறுதி செய்தனர்.
விஞ்ஞானிகளின் கூற்று
ஒமைக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ள இக்குறிப்பிட்ட கரோனா வைரஸ், எந்த விதமான தாக்கத்தையும் விளைவையும் ஏற்படுத்துமா என்ற ஐயப்பாடு அனைவரின் மனதிலும் உள்ளது.

வேகமாகப் பரவுக்கூடியது என்றும், அத்தனை வேகமானது அல்ல என்றும் இரு வேறுவிதமான கருத்துக்கள் உள்ளன. உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், இது உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இல்லை எனக் கூறியுள்ளார்.

இந்த வைரஸுக்கான எதிர் சக்தியை உடலில் கொண்டவர்களுக்கும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் ஒமைக்ரானால் பாதிப்பு இல்லை என்று டாக்டர் கேத்தரீன் கூறியுள்ளார்.

ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி மாரியப்பன்
ஒமைக்ரான் பரவிய நாடுகள்
டெல்டா, டெல்டா பிளஸ் உள்ளிட்ட நான்கு விதமான உருமாறிய கரோனா வைரஸ்கள் நம்மிடையே இருந்தாலும், இதனுடைய தாக்கம் ஐரோப்பிய நாடுகளிலும், பெல்ஜியம், ஜெர்மன் நாடுகளிலும் அதிகமாக இருந்தது.
அதேபோன்று ஓமைக்ரான் தென் ஆப்பிரிக்காவிலிருந்து அண்டை நாடுகளான மொசாம்பிக், ஜிம்பாப்வே, நமீபியா போன்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது.
இதன் காரணமாக அனைத்து நாடுகளும் ஒமைக்ரான் பரவக்கூடிய நாடுகளிலிருந்து வரக்கூடியவர்களை தங்கள் நாட்டு விமான நிலையங்களிலேயே மருத்துவ பரிசோதனை செய்து தனிமைப்படுத்தி உள்ளே அனுமதிக்கின்றனர். அதேபோன்று இந்தியாவிலும் பின்பற்றி வருகிறோம்.
அச்சப்படத் தேவையில்லை
இந்தியாவைப் பொறுத்தவரை ஒமைக்ரானின் தாக்கம் மிக மிக குறைவாகவே இருக்கும் என்பது என்னுடைய கருத்து.
பிரதமரும், தமிழ்நாடு முதலமைச்சரும் தடுப்பூசி செலுத்துதலை மக்கள் இயக்கமாகவே மாற்றியுள்ளனர்.
தமிழ்நாடு அரசின் தீவிரமான செயல்பாடு காரணமாக இதன் தாக்கம் மிகக் குறைவாகவே இருக்கும்.
மேலும், நமது உணவுப் பழக்கம் ஒமைக்ரானை வெகுவாகக் கட்டுப்படுத்தும். நுரையீரலைப் பாதுகாக்கக்கூடிய ரசம் உள்ளிட்ட பாரம்பரிய உணவு முறைகளை தொடர்ந்து நாம் கடைப்பிடித்து வருகிறோம்.
ஆகையால் ஒமைக்ரான் என்ற புதிய உருமாறிய கரோனா வைரஸ் கண்டு நாம் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
32 வகையான உருமாற்றங்கள்
ஐரோப்பிய நாடுகளில் இதன் தாக்கம் அதிகரித்துக் காணப்படும். காரணம், நோய் எதிர்ப்பாற்றல், மனித இனங்களுக்கு இடையே பல்வேறு பகுதிகளில் வேறுபட்டு காணப்படுகிறது.
ஒரு சில தனியார் நிறுவனங்கள்கூட ஒமைக்ரானை சமாளிக்கக்கூடிய புதிய தடுப்பு மருந்துகளை நூறு நாள்களுக்குள் உருவாக்கித் தருவதாகக் கூறியுள்ளன. ஒமைக்ரானிலேயே 32 வகையான உருமாற்றங்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர்.
ஆனாலும் ஓமைக்ரானால் இந்தியாவுக்கு பாதிப்போ அல்லது 3ஆவது அலையோ ஏற்பட வாய்ப்பில்லை என்பதுதான் உண்மை” என்றார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.