திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "ஒட்டன்சத்திரம் தங்கச்சி அம்மாபட்டி கிராமத்தில், சுமார் 6.67 ஏக்கர் பரப்பளவில் சின்னக்கரடு எனும் மலை உள்ளது.
இந்தப் பகுதியில் தங்கச்சி அம்மாபட்டி கிராம பஞ்சாயத்துத் தலைவர் எவ்விதமான அனுமதியும் இன்றி மண் அள்ளியும், மரங்களை வெட்டியும் விற்பனை செய்து வருகிறார். அத்துடன் சின்னக்கரடு பகுதியை வீட்டு மனைகளாக மாற்றும் முயற்சியிலும் ஈடுப்பட்டுவருகிறார். இந்த செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சிறு குன்றுகள் போன்ற காடுகள் அரசின் சொத்துக்களாகும். தங்கச்சி அம்மாபட்டி கிராம பஞ்சாயத்துத் தலைவர் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் மண் எடுப்பது, மரத்தை வெட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகிறார்? என்று கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், கனிம வளத்துறை உதவி இயக்குநர், பழனி வருவாய் மண்டல அலுவலர் ஆகியோர் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கு விசாரணை மார்ச் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: ரூ. 500 கோடி கிராவல் திருட்டு வழக்கு: ஓபிஎஸ் உதவியாளர் மீது வழக்குப்பதிவு - நீதிமன்றத்தில் அறிக்கை