ETV Bharat / city

புதிய சட்டத்தால் வரலாறு காணாத மாற்றம் - அமைச்சர் மூர்த்தி

author img

By

Published : Sep 2, 2021, 10:55 PM IST

போலி பத்திரங்கள்
அமைச்சர் மூர்த்தி

தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறையில் எடுக்கப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் காரணமாகவும், புதிய சட்டத்தின் மூலமாகவும் வரலாறு காணாத மாற்றம் ஏற்படும் என்று அத்துறையின் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மதுரை: சட்டப்பேரவைக் கூட்டம் முடிவடைந்த நிலையில் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளரைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "போலி பத்திரம் தயாரிப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை. அதை ரத்துசெய்யும் அதிகாரத்தைப் பத்திரப்பதிவுத் துறையிலேயே செய்வதற்கு நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

மேலும் அதற்கு உடந்தையாக இருப்பவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட போலி பத்திரங்கள், ஆள்மாறாட்டங்கள், அரசுக்குச் சொந்தமான நிலங்கள், வக்பு வாரியம் எனப் போலியாகப் பதிவுசெய்துள்ளார்கள் என்பதால் புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த வாரம் வரை புதிதாகக் கடன்பெறுபவர்கள் நேரில் சென்று பதிய வேண்டும். ஆனால், தற்போது இணையதளம் வாயிலாகப் பதிவு செய்துகொள்ளலாம். மதுரை சீர்மிகு நகரம் திட்டப் பணிகளைப் பொறுத்தவரை, தற்போதுள்ள அமைச்சர் அதை ஆய்வுசெய்து விரைவாக முடிக்க உத்தரவிட்டுள்ளார்.

பத்திரப் பதிவுத் துறையில் இது வரலாறு காணாத மாற்றம். இதுவரை புதிதாகச் சொத்துகள் வாங்கியவர்கள், சொத்துகளை விட்டு வெளிநாட்டில் தங்கியிருப்பவர்களை ஏமாற்றும் தவறுகள் இனிமேல் நடைபெறாமல் இருப்பதற்குப் புதிய சட்டத்தைத் தாக்கல்செய்துள்ளோம்.

தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி பேட்டி

இந்தப் புதிய சட்டமானது ஆளுநர், குடியரசுத் தலைவர் வரை சென்று இரண்டு மூன்று மாதங்களில் நடைமுறைக்கு வரும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.