மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த மிதுன் சக்கரவர்த்தி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், " நான் உசிலம்பட்டியில் உள்ள இ.புதுப்பட்டி தொடக்க பால் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக உள்ளேன். இந்தச் சங்கத்துடன் சேர்த்து மதுரை மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளும், மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்திற்கு உட்பட்டது. 9 தொகுதிகளுக்கும் ஒரு பொதுப்பிரிவு உறுப்பினர், 5 மகளிர் உறுப்பினர்கள், 3 எஸ்சி/எஸ்டி பிரிவு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும், மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்திற்கு உட்பட்ட 17 உறுப்பினர்கள், சங்கத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள். தொடக்க பால் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக உள்ளவர்கள்தான், மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் உறுப்பினராக இருக்க முடியும் என்பது விதி.
கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதியன்று மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தில் இருந்து தேனி மாவட்டத்தை தனியாக பிரித்து அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், தற்போது மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழரசன் எந்த தொடக்க பால் கூட்டுறவுச் சங்கத்திலும் உறுப்பினராக இல்லை.
மேலும், 17 உறுப்பினர்கள் முழுமையாக இல்லாத நிலையில் தலைவரை நியமித்துள்ளனர். இந்த நியமனம் மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் விதிகளுக்கு உட்பட்டது அல்ல. எனவே, தற்போது தலைவர் எதன் அடிப்படையில் தலைவராக நியமிக்கப்பட்டார் என விளக்கமளிக்கவும், தலைவராக தமிழரசன் செயல்பட இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்" என கூறிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு, மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தமிழரசன் மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக செயல்படக்கூடாது என உத்தரவிட்டனர். மேலும், வழக்கை செப்டம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.