ETV Bharat / city

செப்டம்பர் மாதத்துடன் கீழடி 6ஆம் கட்ட அகழாய்வு நிறைவு  - தமிழ்நாடு தொல்லியல் துறை

author img

By

Published : Aug 25, 2020, 3:41 PM IST

keezhadi-6th-phase-excavations
keezhadi-6th-phase-excavations

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் வரும் செப்டம்பர் மாதம் நிறைவு பெறும் என தமிழ்நாடு தொல்லியல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு தொல்லியல் துறை சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா கீழடியில் பிப்ரவரி 19ஆம் தேதி ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகளைத் தொடங்கியது. இதுவரை ஐந்து கட்ட அகழாய்வுகள் முடிந்துள்ளன.

முதல் மூன்று கட்ட அகழாய்வினை இந்திய தொல்லியல் துறை மேற்கொண்டது. அதில் 7 ஆயிரத்து 818 தொல்பொருள்கள் கண்டறியப்பட்டன. அதேபோல், நான்காம் கட்ட அகழாய்வில் 5 ஆயிரத்து 820 பொருள்களும், ஐந்தாம் கட்ட அகழாய்வில் 900 பொருள்களும் கண்டறியப்பட்டன.

தற்போது நடைபெற்று வரும் ஆறாம் கட்ட அகழாய்வில், பிப்ரவரி 19ஆம் தேதியிலிருந்து ஜூலை 31ஆம் தேதி வரை, கீழடியில் 950 பொருள்களும், கொந்தகையில் 21 பொருள்களும், மணலூரில் 29 பொருள்களும், அகரத்தில் 786 பொருள்களும் என மொத்தம் ஆயிரத்து 786 தொல்பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக, கொந்தகையில் 40 முதுமக்கள் தாழிகளும், மேற்கண்ட நான்கு இடங்களிலும் 128 கரிம படிமங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கீழடி 6ஆம் கட்ட அகழாய்வு

மேலும், இதில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள், சூது பவளங்கள், அகேட் அமெத்திஸ்ட் போன்ற விலைமதிப்பற்ற மணிகள், சுடுமண்ணால் ஆன ஆமை வடிவமைப்பு முத்திரைகள், கால்நடை சார்ந்த விலங்கின் விலா எலும்பு, எடைக்கற்கள், செங்கல் கட்டுமானங்கள் என பல கிடைத்துள்ளன.

அத்துடன் ஒரே முதுமக்கள் தாழியில் 10 சிவப்பு, கருப்பு நிற பானைகள், மனித எலும்புக்கூடுகள், நூல் கற்காலத்தைச் சேர்ந்த மெல் அலகு கத்திகள், நுண் கருவிகள், வெட்டு முகப்புடன் கூடிய செர்ட் வகை மூலக்கூறு, வழவழப்புத் தன்மையுடைய கல்மழு, 300 மி.கி. எடையுடைய தங்க நாணயம், கரிம மயமான நெல்மணிகள், செலடான் வகை சீன மண்பாண்ட ஓடுகள், புகைப்பான்கள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.

கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய பகுதிகளில் இதுவரை 24 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் 59 குழிகளுக்கான கால் பகுதிகள் தோண்டப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் தொல்லியல் ஆய்வாளர்கள், பணியாளர்கள் என 170 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வரும் செப்டம்பர் மாதம் ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவு பெறுவதால் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பருவமழை தொடங்குவதைப் பொறுத்து ஆய்வுப் பணிகள் சற்று முன்பின்னாக நிறைவடையும் என தொல்லியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: கொந்தகையில் மேலும் ஒரு மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.