'ஒரு காலத்தில் சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையன்; இன்று நான் காந்தியவாதி' - பகதூர் சிங்

author img

By

Published : Sep 22, 2022, 11:07 PM IST

Etv Bharat

'வட இந்தியாவிலுள்ள சம்பல் பள்ளத்தாக்கில் கொடூர கொலை, கொள்ளையனாக வாழ்ந்து, வினோபா பாவே, ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோரால் ஈர்க்கப்பட்டு இன்று முழு காந்தியவாதியாக மாறியுள்ளது எனக்குப் பெருமை அளிக்கிறது. காந்தியடிகள் முதன்முதலாக அரையாடை தரித்த மதுரை மாநகருக்கு வருகை தந்ததும் மகிழ்ச்சியாக உள்ளது' என சம்பல் பள்ளத்தாக்குப் பகுதியைச் சேர்ந்த பகதூர் சிங் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு நேர்காணல் வழங்கினார்.

மதுரை: மதுரையில் ஜே.சி.குமரப்பாவின் காந்தியப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு, காந்தி நினைவு அருங்காட்சியகத்துடன் இணைந்து அகிம்சை பொருளாதாரக் கூட்டமைப்பு ஏற்பாட்டில் இன்று (செப் 22) தொடங்கிய 'அகிம்சை சந்தை' நிகழ்வில் தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

கொள்ளைக்காரர் கொள்கைக்காரர் ஆன விதம்: தவிர, வட இந்தியாவின் ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பங்கேற்ற காந்தியவாதி பகதூர் சிங் என்பவர், தனது வாழ்வின் முற்பகுதியில் தான் சம்பல் பள்ளத்தாக்கு பகுதியில் கொடூர கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த நிலையில், காந்தியத்தால் ஈர்க்கப்பட்டு மனம் திருந்தி, தற்போது முழு காந்தியவாதியாக மாறி, காந்தியடிகளின் கொள்கை, தத்துவங்கள், அகிம்சை நெறிகளை காண்போருக்கு எடுத்துரைக்கும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு வாழ்கிறார்.

அட்டூழியக்காரர்கள் கூடாரம்: சம்பல் பள்ளத்தாக்கு என்பது ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்கள் ஒருங்கே சந்திக்கும் வறட்சியான பழுப்பு நிற வெட்டவெளியான பகுதி. அதனைக் கடந்து செல்வோரை ஒன்றுமில்லாதவராக ஆக்கும் கொள்ளையர்களின் கூடாரமாக ஒரு காலத்தில் இப்பகுதி திகழ்ந்தது.

இந்தியா முழுவதும் 40-க்கும் மேற்பட்ட பள்ளத்தாக்குகள் உள்ளன. அவற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், ஆபத்து நிறைந்ததாகவும் திகழ்வதுதான் சம்பல் பள்ளத்தாக்கு. ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் எல்லைப்பகுதியில் பல நூறு கி.மீ., தொலைவில் சம்பல் நதியின் கரையில் அமைந்துள்ள பகுதி. கடந்த 1950ஆம் ஆண்டு தொடங்கி இப்பகுதியில் பல்வேறு கொலை, கொள்ளைச் சம்பவங்களை நிகழ்த்திய பல குழுக்கள் இருந்தன. அதில் ஒரு குழுவின் தலைவியாக இருந்தவர்தான், பூலான்தேவி.

உண்மையில் சொல்லப்போனால் பூலான்தேவியால்தான் சம்பல் பள்ளத்தாக்குப் பகுதி உலகளவில் பெயர் பெற்றுத் திகழ்ந்தது. இங்கு வாழ்ந்த கொள்ளையர்களின் அட்டூழியம் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சட்டம் ஒழுங்குப் பிரச்னைகளால் செய்வதறியாது தவித்தன. அவர்கள் திருந்தி வாழ்வதற்குப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன.

காந்தியவாதியான பகதூர் சிங்: அப்படியொரு முயற்சியில்தான், கடந்த 1972ஆம் ஆண்டு சம்பல் பள்ளத்தாக்குப் பகுதியில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட 654 கொள்ளையர்கள் அத்தொழிலை விட்டுவிட்டு அகிம்சை வழிக்குத் திரும்பி வந்தனர். அவர்களில் ஒருவர்தான் பகதூர்சிங். மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகமும் அகிம்சை பொருளாதாரக் கூட்டமைப்பும் இணைந்து நடத்தும் 'அகிம்சை சந்தை'க்கு இன்று (செப்.22) வந்திருந்தார். ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு மனம் திறந்து பகதூர்சிங் நேர்காணல் அளித்தார்.

அப்போது அவர் பேசிய விவரங்களாவன, 'என்னுடைய குழந்தைப் பருவ காலம் தற்போது நினைவில் இல்லை. நான் குழந்தையாக இருக்கும்போதே பெற்றோர் இறந்துவிட்டனர். என்னுடைய சொத்துகள் அனைத்தையும் உறவினர்களே அபகரித்துக்கொண்டனர். ஆகையால், நான் யாருமற்ற அநாதையாக தனிமையில் விடப்பட்டேன். இதனால், என் வாழ்க்கை மனம்போன போக்கில் செல்லத் தொடங்கியது. அப்போதுதான் சம்பல் பள்ளத்தாக்குப் பகுதியிலிருந்த கொள்ளைக்காரர்கள் என்னை தத்தெடுத்துக்கொண்டனர்.

புதைந்த என் வாழ்க்கை பூந்தோட்டமானது: ஆகையால், நான் சம்பல் பள்ளத்தாக்கில் கொள்ளைத் தொழிலை மேற்கொள்ளத்தொடங்கினேன். இதற்காகச் சிலரை கொலையும் செய்துள்ளேன். என்னுடைய 22 வயதில் சம்பல் பள்ளதாக்கிற்குள் நுழைந்தேன்.

32 வயதுவரை ஏறக்குறைய பத்தாண்டுகள் என்னுடைய வாழ்க்கை சம்பல் பள்ளத்தாக்கிலேயே கழிந்தன. வினோபாபாவே, ஜெயப்பிரகாஷ் நாராயணன், சுப்பாராவ், பி.வி.ராஜகோபால் ஆகியோரின் தொடர் முயற்சி காரணமாக அகிம்சை வழிக்குத் திரும்பி வந்தேன். அவர்கள் சம்பல் பள்ளத்தாக்கில் வாழ்ந்த அனைத்துக் கொள்ளையர்களையும் மாற்ற பெரும் முயற்சி மேற்கொண்டனர்.

காந்தியவாதியாகப் பெருமை: இந்த முயற்சியில்தான், 654 பேர் அத்தொழிலை விட்டு அகிம்சை வழிக்கு மாறினர். அவர்களில் நானும் ஒருவன் என்பதை மிகப்பெருமையோடு இங்கு பகிர்ந்து கொள்கிறேன். நாங்கள் சரணடைந்தபோது, 5 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தனர். அதனை ஏற்றுக்கொண்டு முதலில் ஓராண்டு ஒரு சிறையிலும், மீதமுள்ள 4 ஆண்டுகள் வேறொரு சிறையிலும் எனது வாழ்நாளைக் கழித்தேன்.

மதுரைக்கு வந்தது பெருமை: சிறையிலிருந்து வெளிவந்த பின்பு எங்களுக்குரிய வசதிகளை அரசாங்கமே செய்து கொடுத்தது. இப்போது, நான் காந்தியடிகள் மற்றும் வினோபா பாவேவின் கொள்கைகளைப் பிறருக்கும் எடுத்துரைக்கும் பணியில் என்னை ஈடுபடுத்தி வருகிறேன்.

காந்தியடிகள் அரையாடை விரதம் பூண்ட மதுரைக்கு வந்தது பெருமை - பகதூர் சிங்

அந்தவைகையில், காந்தியடிகள் முதன்முதலாக அரை ஆடை தரித்த பாரம்பரியப் பெருமைக்குரிய மதுரை மாநகரில் நடைபெறும் 'அகிம்சை சந்தை' நிகழ்வில் பங்கெடுப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது' என்றார்.

காந்தியத்தின் தூதுவராக தன்னை பாவித்துக்கொண்டு, அகிம்சையின் பெருமைகளை தனது தாய்மொழியிலேயே உரையாடி பரப்புரை மேற்கொள்கிறார். அவருடன் உள்ள நபர்கள் பகதூர் சிங்கின் கருத்துகளை மற்றவர்களுக்கு தமிழ்மொழியில் விளக்குகின்றனர். பூலான்தேவிக்கும் முன்னால் சம்பல் பள்ளத்தாக்கை அதிர வைத்த கொள்ளைக் கூட்டத்திலிருந்து ஒருவர் காந்தியத்தின் பால் ஈர்க்கப்பட்டது வரலாற்று அதிசயம்தான். அது மிகைச்சொல் அன்று.

இதையும் படிங்க: காந்தியடிகள் அரையாடை விரதம் பூண்ட மதுரையில் தொடங்கிய ‘அகிம்சை சந்தை'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.