மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சி மையத்தை மாற்ற தடை விதிக்கக் கோரி வழக்கு

author img

By

Published : Oct 29, 2021, 10:42 PM IST

உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை

சென்னையிலுள்ள பலவகை குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சி மையத்தை மாற்ற தடை விதிக்கக் கோரிய வழக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை பீனிக்ஸ் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கஸ்தூரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு் தாக்கல் செய்திருந்தார். அதில், "ஒன்றிய அரசு மாற்றுத்திறனாளிகளுக்காக 9 சிறப்பு பயிற்சி மையங்களை உருவாக்கியது. ஒவ்வொரு மாநிலத்திலும் பேச்சு, கற்றல், பார்வைத்திறன், செவித்திறன் என தனித்தனி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பான பயிற்சி மையங்கள் உள்ளன.

தமிழ்நாட்டில் சென்னையில் ஒரே நபர் பலவகை மாற்றுத்திறனாளியாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கான பயிற்சிகள் வழங்குவதற்கான நோக்கத்தோடு முட்டுக்காடு பகுதியில் 15 ஏக்கர் பரப்பளவில் 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு இருபதுக்கும் அதிகமான பிரிவுகளில் பயிற்சியளிக்கப்பட்டு பயிற்றுனர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.

அதேபோல இருபதுக்கும் அதிகமான பலவகை குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிதி நிலையை காரணம் காட்டி பயிற்சி மையத்தை கிளை மையமாக மாற்றமுடிவெடுக்கப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல.

இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாதிக்கப்படுவர். ஆகவே, செகந்திராபாத்தில் உள்ள கற்றல் குறைபாடு கொண்ட பயிற்சி மையத்தோடு சென்னையிலுள்ள பலவகை குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சி மையத்தை இணைப்பதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, முரளி சங்கர் ஆகியோர் அமர்வு, வழக்கு குறித்து ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: 33 குவாரிகள் அமைக்க அனுமதி - லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.