தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் இரண்டு முதல் ஐந்து மற்றும் ஏழு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மூன்றாம் தேதி முதல் புத்தகங்கள் வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா புத்தகம் வழங்கப்பட்டு வருகிறது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் அரசுப் பள்ளியில் பயிலும் 44 ஆயிரத்து 128 மாணவ, மாணவிகளுக்கு இன்று(ஆகஸ்ட் 3) விலையில்லா பாடப் புத்தகங்கள், புத்தகப் பை வழங்கும் நிகழ்ச்சி வாலாஜா நகர ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ரத்னா கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், புத்தகப் பைகளை வழங்கினார். மேலும் மாணவர்கள் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் எனவும் ஆட்சியர் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டம் அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், புத்தகப் பைகள் ஆகியவை வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பள்ளி நிர்வாகம், "மாணவர்கள் மொத்தமாக வந்து பாடப்புத்தகங்களைப் பெற்றுக் கொள்ள கூடாது. வகுப்பு வாரியாக பள்ளிக்கு வர வேண்டும். பள்ளிக்கு வந்த பின்னர் மாணவர்கள் கைகளைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். சமூக இடைவெளியுடன் நின்று பாடப்புத்தகங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும்" என மாணவர்களுக்கு குறுச்செய்தி அனுப்பியுள்ளனர். மேலும் இந்த வார முடிவிற்குள் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட பள்ளிக்கல்வித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று(ஆகஸ்ட் 3) காலை முதல் புத்தக விநியோகம் தொடங்கியுள்ளது. தக்கலை சுற்றுவட்டாரப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் கிராமப் புறங்களில் இருந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல இலவச பொது போக்குவரத்தை நம்பி உள்ளனர். இந்நிலையில் தற்போது ஊரடங்கால் பொது போக்குவரத்து பேருந்து வசதி முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் மாணவர்கள் புத்தகங்கள் வாங்க பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் பெற்றோர்களுடன் சில மாணவர்கள் வந்து புத்தகங்களைப் பெற்றுச் சென்றனர்.
இதையும் படிங்க: இரண்டு முதல் ஐந்து மற்றும் ஏழு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா புத்தகம்!