ETV Bharat / city

கொட்டித்தீர்த்த கனமழை... வெள்ளக்காடான ஈரோடு மாவட்டம்... மக்கள் அவதி

author img

By

Published : Oct 14, 2022, 8:39 PM IST

அந்தியூர் மற்றும் பவானி சுற்று வட்டாரத்தில் கொட்டி தீர்த்த கனமழை
அந்தியூர் மற்றும் பவானி சுற்று வட்டாரத்தில் கொட்டி தீர்த்த கனமழை

அந்தியூர் மற்றும் பவானி சுற்றுவட்டாரத்தில் கொட்டி தீர்த்த கனமழையால், குடியிருப்புக்குள் மழை நீர் புகுந்தது. பல்வேறு இடங்களில் தரைப்பாலங்களை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்வதால் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு: அந்தியூர் மற்றும் பவானி சுற்று வட்டாரப்பகுதிகளில் நேற்று(அக்.13) நள்ளிரவு கனத்த மழை கொட்டித் தீர்த்தது. அந்தியூர் பகுதியில் 10.72 சென்டிமீட்டர் மழையும், பவானியில் 7.62 சென்டிமீட்டர் மழையும் பதிவானது. கனத்த மழையின் காரணமாக அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணைக்கு 1767 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே அணை நிரம்பியுள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேறி வருகிறது.

மேலும் வழுக்குப் பாறை பகுதியிலும் கனமழை பெய்ததால் எண்ணமங்கலம் ஏரிக்கு உபரி நீர் அதிகரித்துள்ளது. வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரும், எண்ணமங்கலம் ஏரியிலிருந்து வெளியேறும் தண்ணீராலும் மூலக்கடைப்பகுதியில் அந்தியூர் - பர்கூர் சாலை மூழ்கி வெள்ளக்காடாக மாறியது. இதனால் காலை 8 மணி வரை அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

அதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதேபோல் அந்தியூர் பெரிய ஏரி நிரம்பி அதிக அளவு தண்ணீர் வெளியேறி வருவதால், அந்தியூரில் இருந்து ஆதிரெட்டியூர் வழியாக வெள்ளித்திருப்பூர் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப்பகுதியில் அதிக அளவு தண்ணீர் வெளியேறி வருவதால் சாலையைக் கடக்க பொதுப்பணித்துறையினர் மற்றும் காவல்துறையினர் பொதுமக்களை அனுமதிக்கவில்லை.

மேலும் வெள்ளித்திருப்பூர் சுற்றுவட்டாரத்தில் கொட்டிய கனமழை காரணமாக இரண்டாவது நாளாக வெள்ளித்திருப்பூர், பாரதி நகரில் சுமார் 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து நின்றது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

கனமழையின் காரணமாக ஏற்கெனவே நிரம்பி இருந்த வரட்டுபள்ளம் அணை மற்றும் அந்தியூர் பெரிய ஏரி, கெட்டிச்சமுத்திரம் ஏரி, எண்ணமங்கலம் ஏரி, கரும்பாறைபள்ளம் ஏரி, தண்ணீர் பள்ளம் ஏரி, வேம்பத்தி ஏரி‍ பிரம்மதேசம் ஏரி ஆகிய ஏழு ஏரிகளும் முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகின்றன.

இதேபோல் பவானி பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக தொட்டிபாளையம் காலனி பகுதியில் சுமார் 40க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது. மேலும் அந்தியூர் பவானி சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் அந்தியூர்-பவானி இடையே சுமார் இரண்டு மணி நேரம் அந்த சாலை வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் அனுப்பப்பட்டன.

அந்தியூர் மற்றும் பவானி சுற்று வட்டாரத்தில் கொட்டி தீர்த்த கனமழை

அந்தியூர் பெரிய ஏரியில் இருந்து வெளியேறும் மழை நீர் அந்தியூரில் உள்ள பெரியார் நகருக்குள் புகுந்தது. அங்குள்ள வீதிகளில் தண்ணீர் உயர்ந்து வருகிறது. மேலும் அந்தியூரில் இருந்து பவானி - அம்மாபேட்டை செல்லும் அண்ணாமடுவு ரவுண்டானா பகுதியில் தற்போது வெள்ள நீர் வந்து கொண்டிருப்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் மீட்புப்பணியில் ஈடுபட உள்ளனர்.

இதையும் படிங்க: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு - குளிக்க, பரிசில்கள் இயக்கத் தடை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.