ஈரோடு: மொடக்குறிச்சி அருகே உள்ள லக்காபுரம் அடுத்த தாசன்காட்டுப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அருள் நாகலிங்கம், இவரது மனைவி கமல சங்கரி. இவர்களுக்கு காயத்ரிதேவி, காவியா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், அருள் நாகலிங்கம் ஈரோடு, கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே சித்த மருத்துவமனை நடத்திவருகிறார். இதனையடுத்து மருத்துவமனைக்கு பின்புறமுள்ள தாசன் காட்டுப்புத்தூரில் கடந்த 11 மாதத்திற்கு முன்பு புதிதாக வீடு வாங்கி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, சித்தா மருத்துவர் அருள் நாகலிங்கம் நேற்று (நவ.19) மயிலாடுதுறைக்குயில் உள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டார். அப்போது வீட்டில் அவரது மனைவி, இரண்டு மகள்கள் மட்டுமே இருந்துள்ளனர். இந்நிலையில் இன்று(நவ.20) காலை தனது சித்த மருத்துவமனைக்குச் சென்ற கமல சங்கரி மற்றும் இரண்டு மகள்கள் மதியம் உணவுக்கு வீட்டிற்கு வந்துள்ளனர்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள், உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 35 சவரன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ. 4 லட்சத்து 12 ஆயிரத்து 650 ரூபாய் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த மொடக்குறிச்சி காவல்துறையினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த, ஈரோடு நகரம் டிஎஸ்பி, ஆனந்தகுமார், பெருந்துறை காவல் ஆய்வாளர் சண்முகம் மற்றும் காவல்துறையினர், இக்கொள்ளை நடந்த வீட்டைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து, கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு, கொள்ளை குறித்து கைரேகை பதிவு செய்தனர். மேலும் இக்கொள்ளைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:Depression over Bay of Bengal: 5 நாள்களுக்கு கனமழை தொடரும்!