இது குறித்து கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இந்திய தொழில் கூட்டமைப்புத் தலைவர் வரதராஜன், பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபைத் தலைவர் கோபால கிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், "இந்தியாவில் மொத்த உணவுப் பொருள் உற்பத்தியில் 38 விழுக்காடு உபயோகிக்காமல் வீணாக்கப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் 28 விழுக்காடு மட்டும் தான் உணவுப்பொருள் வீணாக கொட்டபடுகிறது.
அதை குறைக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் உணவுப்பொருள் உற்பத்தியாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம், இதன் ஒரு பகுதியாக வேளாண் பகுதியை அதிகம் கொண்ட பொள்ளாச்சியில் தேங்காய், தக்காளி காய்கறிகள், நீரா பானம் போன்றவை உற்பத்தி இருந்தும் சில நேரங்களில் சந்தைப்படுத்த முடியாமல் கழிவாக வீசப்படுகிறது.
இதனால் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களை சந்தைப்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் பொள்ளாச்சியில் உணவுப் பொருட்கள் பாதுகாப்பு கருத்தரங்கம் எதிர்வரும் 9ஆம் தேதி நடத்தப் படவுள்ளது. இந்த கருத்தரங்கில் உணவுப் பொருட்கள் உற்பத்தியாளர்கள், தொழில்முனைவோர்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு உணவுப் பொருள் பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்க உள்ளனர். மேலும் இதையடுத்து பொள்ளாச்சியில் உணவு பூங்கா அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தவுள்ளோம்" என தெரிவித்தனர்.