ETV Bharat / city

கோவை மாணவி தற்கொலை வழக்கு: ஆசிரியர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்

author img

By

Published : Dec 14, 2021, 12:15 PM IST

Coimbatore Physics Teacher Arrested in goondas act on student harassment case, கோயம்புத்தூரில் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி குண்டாஸ் சட்டத்தின்கீழ் கைது
Physics Teacher Arrested in goondas act on student harassment case

கோயம்புத்தூரில் பள்ளி மாணவி பாலியல் தொந்தரவு காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், வழக்கில் தொடர்புடைய ஆசிரியர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர்: தனியார் பள்ளி மாணவி ஒருவர், ஆசிரியரின் பாலியல் தொல்லையால் (நவம்பர் 11) தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து பெற்றோர் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.

விசாரணையில், அப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியரின் தொடர் பாலியல் துன்புறுத்தலே தங்களது மகளின் தற்கொலைக்குக் காரணம் என மாணவியின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். இத்துடன் மாணவி தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிவைத்த கடிதத்தில் மூவரின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆசிரியர் கைது

மேலும், அந்த ஆசிரியரால் மாணவி தொடர்ந்து பாலியல் தொல்லைக்கு உள்ளாகியதாகவும், இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும்கூட அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி அம்மாணவி தற்கொலை செய்துகொண்டார் எனவும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து (நவம்பர் 12) அந்த ஆசிரியர் மீது தற்கொலைக்குத் தூண்டுதல், போக்சோ சட்டம் என மொத்தம் மூன்று பிரிவுகளின்கீழ் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து பின்னர் சிறையில் அடைத்தனர்.

முதல்வருக்கு நீதிமன்றக் காவல்

இந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த தனியார் பள்ளியின் முதல்வர் மீது போக்சோ சட்டப்பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரைத் தனிப்படை காவல் துறையினர் நவம்பர் 14ஆம் தேதி பெங்களூருவில் கைதுசெய்தனர்.

முதல்வர் கைதுசெய்யப்பட்ட நிலையில், மாணவியின் உடலை அவரது பெற்றோர் உடற்கூராய்வு நிறைவடைந்த பின் நவம்பர் 14ஆம் தேதி பெற்றுக்கொண்டனர்.

ஓராண்டுக்கு வெளிவர வாய்ப்பில்லை

இதனையடுத்து, கோவை மகளிர் நீதிமன்றம் நீதிபதி முன்பு பள்ளி முதல்வர் முன்னிறுத்தப்பட்டார். அவரை வரும் 26ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதன் அடிப்படையில், அவர் கோவை மத்திய சிறைச் சாலையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், மாணவியை பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் ஆசிரியர் ஏற்கெனவே போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட நிலையில், அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் மீண்டும் கைதுசெய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது. இதனால், அவர் ஓராண்டு விடுதலை செய்யப்பட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரூ. 9 ஆயிரம் கோடி வருவாய் - டாப் கியரில் பறக்கும் பதிவுத்துறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.