ETV Bharat / city

மூலப்பொருள் விலை உயர்வால் சிறு, குறு தொழில்கள் முடக்கம் - முத்தரசன்

author img

By

Published : Dec 22, 2021, 3:48 PM IST

செய்தியாளர்களைச் சந்தித்த முத்தரசன்
செய்தியாளர்களைச் சந்தித்த முத்தரசன்

மூலப்பொருள் விலை உயர்வால் சிறு, குறு தொழில்கள் முடங்கியுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான ஜீவா இல்லத்தில் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சிபிஐ அகில இந்திய மாநாடு 2022ஆம் ஆண்டு அக்டோபர் 18 முதல் விஜயவாடாவில் 5 நாள்கள் நடைபெறவுள்ளது. இதன் முன்னோட்டமாக ஜனவரி மாதம் கோவை பீளமேட்டில் 3 நாள்கள் தேசிய குழு உறுப்பினர்கள் கூடி மாநாட்டில் இறுதி செய்யப்படவுள்ள அறிக்கைகள் முடிவு செய்யப்படும்.

பதவி விலக வேண்டும்

மத்தியில் உள்ள மோடி தலைமையிலான ஆட்சி, ஜனநாயக விரோதமான முறையில் நடைபெற்று வருகிறது என குற்றம்சாட்டிய அவர், நாடாளுமன்றத்தில் பல்வேறு சட்டங்களை ஆர்.எஸ்.எஸ்.சின் விருப்பத்தின் அடிப்படையில் நிறைவேற்றி வருவதாகவும் கூறினார். வேளாண் சட்டங்களை திரும்ப பெற்ற விவகாரத்தில் மோடி பதவி விலகியிருக்க வேண்டும் எனக்கூறிய அவர், இதற்கு முன்னுதாரணமாக தமிழகத்தில் குலக்கல்வி திட்டத்தை கொண்டு வர முயன்றதை எதிர்த்ததால் ராஜாஜி ராஜினாமா செய்ததை சுட்டிக்காட்டினார்.

லக்கிம்பூர் விவகாரத்தில் எட்டு பேர் உயிரிழந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் ஆய்வுக்குழு கூறிய பிறகும் படுகொலை சம்பவத்தை அரங்கேற்றிய அமைச்சர் இதுவரை பதவி விலகவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார். சிறு, குறு தொழில்கள் மூலப்பொருள் விலை உயர்வால் முடங்கியுள்ளதாகவும் நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை குறைந்துவிட்டது. நீதிமன்றங்கள் அரசியலமைப்பு சட்டத்திற்கு மாறாக ஆர்.எஸ்.எஸ்-ன் துணை அமைப்பாக மாறிவிட்டது.

செய்தியாளர்களைச் சந்தித்த முத்தரசன்

கண்டனம்

ஸ்ரீபெரும்புதூர் பாக்ஸ்கான் தொழிலாளர்கள் போராட்டத்தின்போது தொழிலாளர்கள், தொழிற்சங்கத்தினர் மீது காவல் துறை தாக்குதல் நடத்தியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். இல்லம் தேடி கல்வி, செவிலியர் இட ஒதுக்கீடு தொடர்பாகவெல்லாம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மோடி அரசு ஹிட்லரை போல ஒரு பாசிஸ்ட் அரசு, இதற்காக என் மீது வழக்கு தொடர்ந்தாலும் கவலையில்லை. தன் மீது குற்றம் இல்லை என்றால் ஏன் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஓடி ஒளிய வேண்டும். அவர் ஓடி ஒளிய வேண்டிய அவசியமும் இல்லை. காவல் துறை இவ்வளவு கால தாமதம் செய்ய வேண்டியதும் இல்லை.

கோரிக்கை

உலகில் எந்த மீனவர்களுக்கும் நடக்காத துன்பம் தமிழ்நாடு மீனவர்களுக்கு ஏற்பட்டு வருகிறது. தமிழ்நாடு மீனவர்கள் இந்திய மீனவர்களா இல்லையா என ஒன்றிய அரசு விளக்கமளிக்க வேண்டும். மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத அரசாக ஒன்றிய அரசு இருக்கிறது. அவ்வாறு பாதுகாப்பு அளிக்க முடியாவிட்டால், தமிழ்நாடு மீனவர்கள் தற்காப்பிற்காக துப்பாக்கிகள் வைத்துக்கொள்ள அனுமதியளிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: மீன்பிடி தடைச் சட்டத்தை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.