உரிமையாளரின் வீட்டில் பணம் திருடிய இளைஞர் கைது

author img

By

Published : Nov 23, 2021, 10:44 AM IST

பொள்ளாச்சியில் பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

பொள்ளாச்சியில் உரிமையாளரின் வீட்டிலிருந்த பணத்தைத் திருடிய, இளைஞரை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் தர்மராஜ் (36) என்பவர் பெரிய ஆர்டர்களை எடுத்து கார்பெண்டராக வேலை செய்துவருகிறார். இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி பொள்ளாச்சியில் உள்ள தனியார் நகை அடகுக் கடையில், தனது 11 சவரன் தங்க நகைகளை அடைமானம் வைத்து மூன்று லட்சத்து 30 ஆயிரம் ரூபாயைப் பெற்றுள்ளார்.

அதன்பின் வெங்கட்ராமபுரத்திலுள்ள தனது வீட்டிற்குச் சென்று, அங்குள்ள அலமாரியில் தனது பணத்தை வைத்துவிட்டு, வெளியே சென்றவர் கதவை மூடவில்லை என்பதால், மீண்டும் தளத்திற்கு வந்து கதவைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.

இதனையடுத்து, மறுநாள் நவம்பர் 17ஆம் தேதி காலை வீட்டிற்குத் திரும்பிய தர்மராஜ் அலமாரியை வந்து பார்க்கும்போது அங்கிருந்த பணம் திருடுபோயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்தச் சூழலில் தர்மராஜின் வீட்டில் பணியாற்றும் ராஜ் (33), அவருடன் வேலை செய்யும் மற்றொரு நபரையும் காணவில்லை என்பது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து, தர்மராஜ் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினத்தின் உத்தரவின்பேரில், பொள்ளாச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் செல்வி தமிழ்மணி அறிவுறுத்தலின்படி, ஆய்வாளர் ராமதாஸ் தலைமையில் உதவி ஆய்வாளர் திருமலைசாமி, காவலர்கள் சுகுமார் கதிர் பிரபு ஆகியோர் விசாரணை மேற்கொண்டுவந்தனர்.

இப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டு ராஜ் (33), மணிகண்டன் ஆகியோரைக் கைதுசெய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து மூன்று லட்சத்து 30 ஆயிரம் ரூபாயைப் பறிமுதல்செய்த காவல் துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:'திரைத் துறையை வாழவையுங்கள்!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.