தொடர் பெட்ரோல் குண்டு சம்பவங்கள்... தமிழ்நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் தீவிர பாதுகாப்பு...

author img

By

Published : Sep 24, 2022, 9:34 PM IST

Etv Bharat

கோவை பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தின் எதிரொலியாக, சென்னை சென்ட்ரல் உட்பட மாநிலத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை: கோவையில் பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து முன்னணியினரின் அலுவலகம், வீடுகள் என 7 இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதனால் கோவை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து, சென்னை உள்பட தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் இன்று (செப்.24) ரயில்வே போலீசார் பாதுகாப்பை பாலப்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகளுக்கு வரும் அனைத்து ரயில்களிலும் ரயில்வே போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி, ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளின் உடமைகளை சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர். சந்தேகிக்ககூடிய வகையில் யாரேனும் ரயில் நிலையங்களில் வலம் வருகிறார்களா என்பதையும் சிசிடிவி மூலம் கண்காணித்து வருகின்றனர்.

இதனிடையே சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே எஸ்.பி அதிவீர பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், 'ரயில் மூலம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் சந்தேகத்திற்கிடமான நபர்களை பிடித்து அவர்களின் உடமைகளைத் தொடர்ந்து ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டு வருவதாகவும், ரயில் பெட்டிகளில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதும் உள்ளதா? என்பதை கண்டறிய மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்படுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேபோல சென்னை, திருச்சி, மதுரை, கோவை, விருதுநகர் உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், திருச்சி மாவட்டத்தில் 356 ரயில்வே போலீசாரும், சென்னை மாவட்டத்தில் 410 ரயில்வே போலீசாரும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பள்ளி கல்லூரி மாணவர்களின் அட்டகாசங்கள் தொடர் கதையாகியுள்ள நிலையில், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

கோவை பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலி - ரயில் நிலையங்களில் பாதுகாப்புகள் தீவிரம்

இதையும் படிங்க: சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 4 உபி இளைஞர்கள் கேரளாவில் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.