ETV Bharat / city

காவலர்களால் நேர்ந்த இருவேறு விபத்து: 7 பேர் மருத்துவமனையில் அனுமதி

author img

By

Published : Sep 7, 2020, 11:07 AM IST

covai drunken policeman dashed bike
covai drunken policeman dashed bike

கோயம்புத்தூர்: மாவட்டத்தில் காவலர்களால் நேர்ந்த இருவேறு விபத்தில் ஏழு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் காவல் நிலையத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்துவருபவர் சார்லஸ் (50). இவர் பகல் வேலையை முடித்துவிட்டு காரணம்பேட்டை நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு கனரக வாகனத்தை முந்த முயற்சித்துள்ளார்.

அப்போது எதிரில் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதுவது போல் சென்றதில் நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் கீழே விழுந்தது. இதில் இருசக்கர வாகன ஓட்டிக்கு லேசான காயம் ஏற்பட்டது.

ஆனால் காவலர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்சென்று சூலூர் விமானப்படைத் தளம் அருகே கட்டுப்பாட்டை இழந்து விமானப்படைத்தளம் சுவரில் மோதியுள்ளார்.

அதில் காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இது குறித்து தகவலறிந்த சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் சுந்தரபாண்டியன், மாலையில் அவரது காரில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சார்லஸ் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனைக்குச் சென்றுகொண்டிருந்தார் .

அப்பொழுது வேகமாக வந்து மருத்துவமனையின் எதிர்புறம் சட்டென நிறுத்திய அவர் கார் மீது, அவ்வழியாக வந்த பயணிகள் தானியிலிருந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவத்தில் ஆய்வாளரின் கார் நிற்காமல் சாலையில் எதிர் திசையில் சென்று தலைமறைவானது.

விபத்தை ஏற்படுத்திய காவல் ஆய்வாளரின் கார்

இச்சம்பவம் குறித்து சூலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். சுந்தரபாண்டியன் தலைமறைவாகி இருப்பதால் காவல் துறையினர் தேடிவருகின்றனர். இந்த விபத்து குறித்த கண்காணிப்புப் படக்கருவியின் காட்சி வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.