ETV Bharat / city

இந்தியா முழுவதும் பல கோயில் திருவிழாக்களில் கைவரிசை காட்டிய பெண் கைது

author img

By

Published : Sep 3, 2022, 10:50 PM IST

இந்தியா முழுவதும் பல கோயில் திருவிழாக்களில் கைவரிசை காட்டிய பெண்கள்
இந்தியா முழுவதும் பல கோயில் திருவிழாக்களில் கைவரிசை காட்டிய பெண்கள்

இந்தியா முழுவதும் கோயில் திருவிழாக்களை குறிவைத்து செயின் பறிப்பில் ஈடுபடும் பெண் கும்பலில் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை: கோயில் திருவிழாவில் நகையைத் திருடிய பெண் ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திடுக்கிடும் பல தகவல்களை வழங்கியுள்ளார்.

சென்னை தாழம்பூர் பகுதியில் அமைந்துள்ள மேலக்கோட்டையூர் கோயில் மற்றும் கேளம்பாக்கம் அம்மன் கோயிலில் கடந்த மாதம் 1ஆம் தேதி திருவிழா நடந்தது. அப்போது இரு கோயில்களிலும் நடைபெற்ற திருவிழாவின் போது ஒரே நாளில் 8 செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்ததாக தாழம்பூர் காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்தன.

இதனால் உடனடியாக தாழம்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இரு பெண்கள் டிப்டாப் ஆக கோயிலுக்குள் நுழைந்து கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நூதன முறையில், அதாவது பெண்களிடம் சென்று, புடவையால் நகையை மூடி நைசாக பறித்துச் செல்வது போல் சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது.

விரட்டிப்பிடித்த காவல்துறை: குறிப்பாக சிசிடிவியில் முக அடையாளங்கள் தெளிவாக தெரியாததால், ஆர்டிஸ்டை வரவழைத்து செயின் பறிக்கும் பெண்ணை வரைந்துள்ளனர். பின்னர் வரையப்பட்ட படத்தை வைத்து சுமார் 30க்கும் மேற்பட்ட பழைய குற்றவாளிகளுடன் புகைப்படத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது எதுவும் சிக்கவில்லை.

பின்னர் அவர்களின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியபோது இரு பெண் குற்றவாளிகளின் செல்போன் எண், அதனை சுற்றிய பகுதிகளில் சம்பவத்தின் போது இருந்ததை கண்டுபிடித்தனர். உடனடியாக தனிப்படை அமைத்து செல்போன் எண்ணை டிராக் செய்யும் போது, 4 நாட்களாக நிற்காமல் கேரளாவை நோக்கி அவர் சென்றதை அறிந்து, துரத்தி சென்று பாலக்காடு பகுதியில் வைத்து ஒரு பெண்ணை கைது செய்தனர்.

இதனையடுத்து கைது செய்த பெண்ணை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தும் போது திடுக்கிடும் தகவல் வெளியானது. அவர் கூடுவாஞ்சேரி மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த பாண்டீஸ்வரி(27) என்பதும் இவரது கணவர் அஜித், ஓட்டுநராகப் பணியாற்றி வருவதும் விசாரணையில் தெரியவந்தது.

டைரி போட்டு திருடிய கும்பல்: மேலும், கூடுவாஞ்சேரி மணிமங்கலம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் இது போன்ற செயின் பறிப்பு தொழிலையே செய்து வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக ’பாய்ஸ்’ படத்தில் எந்த கோயில்களில் எந்த நேரத்தில் அன்னதானம் அளிப்பார்கள் என காமெடி நடிகர் செந்தில் கூறுவதைப் போல, இந்த பெண்கள் இந்தியா முழுவதும் எந்தெந்த கோயில்களில் எந்த தேதிகளில் திருவிழா நடைபெறுகிறது என்ற விவரங்களை வைத்துக்கொண்டு, குழுக்களாக பிரிந்து கோவிலுக்குள் புகுந்து செயின் பறிப்பதாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் பல கோயில் திருவிழாக்களில் கைவரிசை காட்டிய பெண்கள்

அதிலும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நோட்டமிட்டு, பெண் அருகே சென்று புடவையால் கழுத்தை மூடி, உடனடியாக கட்டர் மூலமாக செயினை பறித்துவிட்டு நொடிப்பொழுதில் தப்பி செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளதாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இதே போல இந்தியா முழுவதும் 1 வருடங்களாக பல கோயில்களுக்கு சென்று இந்த முறையைப் பயன்படுத்தி பல பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் 47 சவரன்: அதே போல கடந்த மாதம் 1ஆம் தேதி பாண்டீஸ்வரி மற்றும் அவரது உறவினர் ரதி ஆகியோர் இணைந்து தாழம்பூர் பகுதியில் உள்ள இரு கோயில்களில் ஒரே நாளில் 47 சவரன் நகைப்பறிப்பில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன் பிறகு ஓணம் பண்டிகை கொண்டாட்டம் என்பதால், கேரளாவிற்கு சென்று கைவரிசை காட்ட சென்றபோது காவல் துறையினர் மடக்கி கைது செய்துவிட்டதாக பாண்டீஸ்வரி விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட பாண்டீஸ்வரிடம் இருந்து 47 சவரன் நகைகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள உறவினர் ரதியை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆன்லைன் லோன் ஆப்... ஒரு நாளைக்கு ரூ. 1 கோடி வரை மோசடி...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.