ETV Bharat / city

திருச்சியில் போலீசார் தாக்குதலில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்: மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

author img

By

Published : Sep 13, 2022, 10:27 PM IST

Etv Bharat
Etv Bharat

திருச்சியில் காவல்துறையினர் தாக்கியதில் பலியானவரின் மனைவிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: திருச்சியில் கடந்த 2019ஆம் ஆண்டு போலீசார் தாக்கியதில் உயிரிழந்த முருகன் என்பவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தமிழ்நாடு அரசிற்கு உத்தரவிட்டதோடு சம்பந்தப்பட்ட போலீசார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்துள்ளது.

திருச்சியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய முருகன் என்பவரை கடந்த 2019ஆம் ஆண்டு டிச.13ஆம் தேதி சமயபுரம் போலீசார் கைது செய்து லாட்ஜில் அடைத்து வைத்து விசாரணை மேற்கொண்டதில் முருகன், 15ஆம் தேதி மரணமடைந்தார்.

போலீசார் தாக்கியதால் தான் அவர் இறந்ததாகப் புகார் கூறி, அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுசம்பந்தமாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அதேபோல, திருவெறும்பூரைச் சேர்ந்த ரத்தினம் என்பவரும் புகார் அனுப்பியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினர் துரை.ஜெயச்சந்திரன், திருச்சி நடுவர் நீதிமன்ற நீதிபதியின் விசாரணை அறிக்கையில் இருந்தும், மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவு விசாரணை அறிக்கையில் இருந்தும் முருகனை போலீசார் தாக்கியதால் தான் இறந்திருக்கிறார் என்பது நிரூபணமாகியுள்ளதாகக் கூறி, முருகனின் மனைவி சரசுவிற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

திருச்சி ராம்ஜிநகர் காவல் நிலைய அப்போதைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார், சமயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் மதன் ஆகிய இருவரிடம் இருந்து தலா 2 லட்சம் ரூபாயும்; லால்குடி காவல் நிலைய அப்போதைய ஏட்டு விஜயகுமார், சிறுகானூர் காவல் நிலைய அப்போதைய காவலர் நல்லெந்திரன், கொள்ளிடம் காவல் நிலைய அப்போதைய காவலர் ரகுமான், திருச்சி சிபிசிஐடி ஏட்டு சரவணகுமார் ஆகிய நான்கு போலீசாரிடம் இருந்து தலா 25 ஆயிரம் ரூபாயும் வசூலிக்க அரசுக்கு உத்தரவிட்ட ஆணையம், இவர்கள் ஆறு பேருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கையும், குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ள பரிந்துரைத்துள்ளது.

இதையும் படிங்க: குவைத் நாட்டிற்கு வேலைக்குச்சென்ற திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நபர் சுட்டுக்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.