சென்னை: கரோனா பரவலை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, தடுப்பூசி செலுத்துவதற்கான தனி கவனம் செலுத்தி வருகிறது. 18 வயதிற்கு மேற்பட்டோர் மட்டுமே தடுப்பூசி செலுத்தி கொள்ள அனுமதி இருந்த நிலையில், தற்போது 15 முதல் 18 வயது உடையவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஜனவரி 3ஆம் தேதி முதல், இந்தத் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க உள்ளது. அனைத்து மருத்துவ அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள் ஆகியோருக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை கடிதம் வாயிலாக வழிகாட்டு நெறிமுறைகளை இன்று (ஜன.1) அனுப்பியுள்ளது.
முன்பதிவு முக்கியம்
இதற்காக சுகாதாரத்துறை அனுப்பியுள்ள கடிதத்தில், "2007ஆம் ஆண்டுக்கு முன், பிறந்தவர்கள் தடுப்பூசி போட தகுதியானவர்கள். அவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்த வேண்டும். அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றில் தகுதியான மாணவர்களை கணக்கெடுக்க வேண்டும். இதற்காக, ஆசிரியர் ஒருவரை பொறுப்பாளராக நியமித்து, கணக்கு எடுக்கும் பணிகளையும் ஒருங்கிணைக்கும் பணியும் மேற்கொள்ள வேண்டும்.
பள்ளி நிர்வாகத்தையும், சுகாதாரத் துறையையும் அந்த ஆசிரியர் ஒருங்கிணைத்து பள்ளிகளின் வாயிலாகவே முகாம்கள் அமைத்து தடுப்பூசியை மாணவர்களுக்கு செலுத்த நடவடிக்கை எடுக்கலாம். 15 - 18 வயது உடையவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு முன், கோவின் இணையத்தில் முன்பதிவு செய்யவேண்டும்.
தமிழ்நாட்டில் ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்
மேலும், அவர் ஆதார் அட்டை (அல்லது) 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (அ) பள்ளிக்கூடத்தின் அடையாள அட்டை பயன்படுத்தி கொள்ளலாம். பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை மாவட்ட மருத்துவ அலுவலர் உறுதி செய்ய வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
15 - 18 வயதுக்கு உள்பட்டவர்கள், ஜனவரி 3ஆம் தேதி போரூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். அதே நாளில் மாவட்ட சுகாதாரத்துறை பள்ளிகளில் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் புதிய காவல் ஆணையரகங்களை திறந்துவைத்த முதலமைச்சர்