ETV Bharat / city

’தமிழ்நாடு ஒரு மகத்தான மார்க்சிய படைப்பாளரை இழந்துவிட்டது’ - திருமா

author img

By

Published : May 28, 2021, 9:37 PM IST

இரா ஜவகர்,  திருமாவளவன்
Comrade Jawahar death: Tamil Nadu has lost a great Marxist creator! Thirumavalavan

மார்க்சிய எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமான இரா.ஜவகர் மறைவிற்கு விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இரா.ஜவகர் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அஞ்சலிக் கடிதத்தில்:

"மார்க்சிய சிந்தனையாளரும் முற்போக்கு எழுத்தாளருமான இரா.ஜவகர், கரோனா கொடுந்தொற்றுக்கு பலியானார் என்னும் தகவல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தாங்கொணா வேதனையளிக்கிறது.

அவரது எழுத்துகள் கடைகோடி மனிதர்களுக்கும் எளிதாகப் புரியும் வகையில் மார்க்சிய மெய்யியலைக் கொண்டுபோய் சேர்த்திருக்கின்றன. ஒரு ஆற்றல் வாய்ந்த மார்க்சிய படைப்பாளரைத் தமிழ்நாடு இழந்துவிட்டது. அவரது மறைவு, தமிழ்நாட்டிற்கு, குறிப்பாக, இடதுசாரி முற்போக்கு சக்திகளுக்கு நேர்ந்த பேரிழப்பாகும்.

விசிக திங்களிதழான 'தமிழ்மண்' இதழில் நான் எழுதிவந்த 'அமைப்பாய்த் திரள்வோம்' தொடரினை மாதந்தோறும் தவறாமல் படித்துவிட்டு மனமாரப் பாராட்டி என்னை ஊக்கப்படுத்துவார்.

தொடர்ந்து, 58 கட்டுரைகள் எழுதிய நிலையில், தேர்தல் உள்ளிட்ட பல்வேறு பணிச்சுமைகளாலும் தீராத பிடரி வலியாலும் 'அமைப்பாய்த் திரள்வோம்' தொடரினை இடையில் நிறுத்திவிட்டேன். அப்போது, "இடைநிறுத்தம் கூடாது; தொடர்ந்து எழுதுங்கள்" என்று என்னைத் தட்டிக்கொடுத்துப் பேரூக்கமளித்தார்.

அத்துடன், எழுதி முடித்த கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து அதனை ஒரு நூலாக்கி வெளியிடவைத்த அரும்பெரும்பணியையும் ஆற்றியவர் அவர்.

என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்

குறிப்பாக, நக்கீரன் கோபாலிடம் பேசி அவரது நக்கீரன் பதிப்பகத்தின் மூலம் அதனை வெளிக்கொணர்ந்தவர் ஜவகர், அந்நூலுக்கு அணிசேர்க்கும் வகையில் மார்க்சிய நோக்கிலான ஒரு ஆய்வுரையை அணிந்துரையாக வழங்கி பெருமை சேர்த்தவர்.

கருத்தியல் தளத்தில் சிபிஐ (எம்) கட்சியின் செயற்பாட்டாளராக இருந்தாலும், ஒரு விசிக தோழரைப் போலவே என்மீது அன்பையும் தோழமையையும் பொழிந்தவர். அதே உணர்வோடு ’அமைப்பாய்த் திரள்வோம்’ நூலை ஒரு வடிவமாக்கி நமது கைகளில் தவழச் செய்தவர். அவருக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

அவரது மறைவால் துயருற்று வாடும் அவரது குடும்பத்தினருக்கும் சிபிஐ (எம்) கட்சியினருக்கும், இன்னும் பிற இடதுசாரி ஜனநாயக சக்திகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது நெஞ்சம் நிறைந்த நேசத்துக்குரிய அருமை தோழர் ஜவகர் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இரா.ஜவஹர் மறைவு: சிபிஎம், சென்னை பத்திரிகையாளர் மன்றம் இரங்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.