கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னம் - தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதிய மத்திய சுற்றுச்சூழல் துறை

author img

By

Published : Oct 5, 2022, 4:08 PM IST

கடலுக்கு நடுவில் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம்

கடலுக்கு நடுவில் கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னம் அமைப்பது குறித்து, தமிழ்நாடு அரசிற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை கடிதம் அனுப்பியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி நடைபெற்ற மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை சுட்டிக்காட்டி, தமிழ்நாடு பொதுப்பணித்துறைக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை கடிதம் எழுதியுள்ளது.

பேனா நினைவுச்சின்னம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையை தயாரிக்க, தமிழ்நாடு அரசுக்கு சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு அனுமதி அளித்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இலக்கியப்பணிகளைப்போற்றும் வகையில் மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்திற்கு அருகே கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்திலிருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் பேனா சிலை வைக்க மாநில அரசு திட்டமிட்டிருக்கிறது.

இந்தச் சிலை அமைந்துள்ள பகுதிக்கு செல்ல கடற்கரையிலிருந்து சுமார் 650 மீட்டர் நீளத்துக்கு கண்ணாடியிலான மேம்பாலமும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பாலம் நிலத்தின் மீது 290 மீட்டரும், கடலின் மீது 360 மீட்டரும் அமையும் வகையில் கட்டப்படும். ரூ.81 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த பேனா சிலைக்கு ‘கலைஞர் பேனா நினைவுச் சின்னம்’ எனப் பெயரிடப்படுகிறது.

தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.81 கோடி மதிப்பில் அமைக்கப்படும் பேனா நினைவுச்சின்னத்திற்கு தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஏற்கெனவே அனுமதி வழங்கியிருந்தது. பேனா நினைவுச்சின்னம் அமைக்க அனுமதிகோரி மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திற்கு தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பியிருந்தது.

தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தைப்பரிசீலித்த மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு பொதுமக்கள் கருத்துக்கேட்பு உட்பட பல்வேறு நிபந்தனைகளை விதித்ததோடு, இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தயாரிக்கவும் அனுமதி வழங்கியுள்ளது.

மத்திய அரசு விதித்துள்ள நிபந்தனைகள் மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை நான்கு ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு எழுதிய கடிதத்தில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ‘பாரத் ராஷ்டிர சமிதி’ - புதிய தேசிய கட்சியின் பெயரை அறிவித்தார் சந்திரசேகர ராவ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.