ETV Bharat / city

கடன்தொல்லையால் கொலை: தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு!

author img

By

Published : Jun 28, 2021, 4:28 PM IST

கடன்தொல்லையால் கொலை: துாக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு!
கடன்தொல்லையால் கொலை: துாக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு!

கடன் தொல்லையால் தனது குடும்பத்தினரை கொலைசெய்த ஜவுளிக்கடை உரிமையாளருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு: பம்மல் நந்தனார் தெரு, ரங்கநாதன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் தாமோதரன், பம்மல் பகுதியில் ஜவுளிக்கடை நடத்திவந்தார்.

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின், ஜவுளி வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் சுமை அதிகரித்ததால் விரக்தியில் இருந்த அவர், 2017 டிசம்பர் 12இல் மனைவி தீபா, ஏழு வயது மகன் ரோஷன், நான்கு வயது மகள் மீனாட்சி, தாய் சரஸ்வதி ஆகியோரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில், தாமோதரன் தவிர மற்றவர்கள் இறந்துவிட்டனர்.

உயிர் பிழைத்த தாமோதரனுக்கு எதிரான வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம், அவருக்கு தூக்கு தண்டனை விதித்து கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பு உறுதி செய்வதற்காக வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதேசமயம் தண்டனையை ரத்து செய்யக்கோரி தாமோதரனும் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஆர். பொங்கியப்பன் அடங்கிய அமர்வு, தாமோதரனை குற்றவாளி என தீர்மானித்த தீர்ப்பை உறுதி செய்தது. அதேசமயம், அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்ததுடன், 25 ஆண்டுகளுக்கு அவருக்கு எந்த தண்டனைக் குறைப்பும் வழங்கக்கூடாது என தீர்ப்பளித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.