நாளை 1000 இடங்களில் சிறப்புக்காய்ச்சல் முகாம்கள் நடைபெறும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

author img

By

Published : Sep 20, 2022, 6:16 PM IST

தமிழ்நாடு

நாளை தமிழ்நாடு முழுவதும் 1000 சிறப்பு காய்ச்சல் முகாம்களும், சென்னையில் 100 முகாம்களும் நடைபெற உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் இதய நோய் வல்லுநர்கள் உடனான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

ஆய்வுக்குப்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், " இதய நோய் மருத்துவர் மற்றும் வல்லுநர்கள் ஆய்வுக்கூட்டம் இன்று(செப்.20) நடைபெற்றது.

இதில் சிகிச்சை பெறுபவர்கள் முதல்வர் காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின்கீழ் 2009 ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை 1,19,10,653 பயனாளிகள் 10,835 கோடி ரூபாய் காப்பீட்டுத்தொகையின் மூலம் பயனடைந்துள்ளனர்.

இத்திட்டத்தில் 1,513 சிகிச்சை முறைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதில் 8 சிறப்பு உயர் சிகிச்சை முறைகளும், 52 முழுமையான பரிசோதனை முறைகளும் 11 தொடர் சிகிச்சை முறைகளும் அடங்கும். இத்திட்டத்தின்கீழ் 937 தனியார் மற்றும் 796 அரசு மருத்துவமனைகள் என ஆக மொத்தம் 1,733 மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

காப்பீட்டுத்திட்டம் பயன்படுத்துவோர் விழுக்காடு, இவ்வரசு பொறுப்புக்கு வந்த பிறகு 37 விழுக்காட்டில் இருந்து 48 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இதற்கு துணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும், இந்த ஆய்வுக் கூட்டத்தில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் ஜனவரி முதல் 1,166 நபர்கள் H1N1நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 371 நபர்கள் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இதில் 15 நபர்கள் மட்டுமே அரசு மருத்துவமனையில் உள்ளனர். மீதம் உள்ளவர்கள் தனியார் மற்றும் வீடுகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கடந்த 10 மாதங்களில் 10 நபர்கள் இந்த நோயால் இறந்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் 11,333 இடங்களில் மருத்துவம் பார்க்கவும், மருந்துகள் வழங்கியும் வருகின்றனர். இருப்பினும் நாளை தமிழ்நாடு முழுவதும் 1000 சிறப்பு காய்ச்சல் முகாம்களும், சென்னையில் 100 முகாம்களும் நடைபெற உள்ளது. சளி மற்றும் உடல்நிலை சரி இல்லை என்றால் அங்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம்.

இந்த காய்ச்சல் முகாம்களுக்கு தமிழ்நாட்டில் 476 நடமாடும் மருத்துவக் குழுக்கள் ஈடுபடுவர். 3 நபர்களுக்கு மேற்பட்ட நபர்கள் காய்ச்சல் இருந்தால் அங்கு இந்த முகாம் தொடர்ந்து நடைபெறும். கரோனா கட்டுக்குள் உள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பள்ளிக்கூடங்களில் சாதிப் பாகுபாடு காட்டப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.