ETV Bharat / city

வாணியம்பாடியில் தோல் பதனிடுதல் துறைக்கான திறன் மேம்பாட்டு மையம் !

author img

By

Published : Nov 5, 2020, 2:12 PM IST

வாணியம்பாடியில் தோல் பதனிடுதல் துறைக்கான திறன் மேம்பாட்டு மையம் !
வாணியம்பாடியில் தோல் பதனிடுதல் துறைக்கான திறன் மேம்பாட்டு மையம் !

சென்னை : வாணியம்பாடியில் 20 கோடி ரூபாய் மதிப்பில் தோல் பதனிடுதல் துறைக்கான பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 20 கோடியே 37 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள இந்த மையத்தை மத்திய காலணி பயிற்சி நிறுவனமும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமும் இணைந்து உருவாக்கவுள்ளன.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் கையெழுத்தானது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வாணியம்பாடியில் 20 கோடி ரூபாய் மதிப்பில் தோல் பதனிடுதல் துறைக்கான பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் கையெழுத்தானது.

அதனைத் தொடர்ந்து, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை சார்பில் சென்னை கிண்டியில் பொது மற்றும் தனியார் கூட்டமைப்பாக அமைக்கப்பட்டுள்ள சுகாதார நலனுக்கான தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையத்தை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் சரக்கு நகர்வு மேலாண்மைக்கான துறை திறன் குழுமத்தின் இணைந்து பொது மற்றும் தனியார் கூட்டமைப்பாக காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள இன்டோஸ்பேஸ் தொழிற் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சரக்கு நகர்வு மேலாண்மை மற்றும் போக்குவரத்து பிரிவிற்கான தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

மேலும் இம்மையத்துடன் ‘உலக சுகாதார அமைப்பும்’ கைகோர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தற்போதைய கோவிட்-19 நோய் தொற்றால் ஏற்பட்ட பேரிடரை கருத்தில் கொண்டு உலக சுகாதார அமைப்புடன் இணைந்து கோவிட்-19 தொற்று தொடர்புடைய பயிற்சி பாடதிட்டத்தினை தொடங்குகிறது.

தமிழ்நாடு முதலீட்டு மேம்பாட்டுத் திட்டம் - நிலை II-ன் ஒரு பகுதியாக ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை (JICA) மற்றும் தமிழ்நாடு அரசிற்குமிடையே 50:50 விகிதாசார பங்களிப்புடன் 20 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் சுகாதார நலனுக்கான தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையம் (TN Apex Skill Development Centre for Healthcare) அமைக்க நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில், தலைமைச் செயலாளர் க. சண்முகம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுதீன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இயக்குநர் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநர் வி. விஷ்ணு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.