ETV Bharat / city

'முந்திரி ஆலை தொழிலாளர் மரணம்; நீதி பெற்றுத் தருவது எப்போது?'

author img

By

Published : Sep 22, 2021, 4:00 PM IST

கடலூர் திமுக எம்பியின் முந்திரி ஆலை தொழிலாளர் சந்தேக மரணத்தில் நீதி பெற்றுத்தருவது எப்போது எனக் கேள்வியெழுப்பியுள்ள பாமக நிறுவனர், நீதிமன்ற ஆணையின் மூலம் இந்த வழக்கில் நீதி நிலைநாட்டப்படும் வாய்ப்புகள் உருவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பம் பகுதியில், திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி. ரமேஷுக்குச் சொந்தமான முந்திரி ஆலையில் பணியாற்றிவந்த மேல்மாம்பட்டைச் சேர்ந்த தொழிலாளர் கோவிந்தராசு சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்தார். இது குறித்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில், இது குறித்து ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

  • வீரம் விளைந்த பூமியடா.... நமது முந்திரி, பலா விளையும் பூமி! அந்த பூமியில் அநியாயமாய் ஓர் அப்பாவி படுகொலை செய்யப்பட்டானடா! அந்தப் படுகொலைக்காக சம்பந்தப்பட்ட குடும்பத்துக்கு நீதி பெற்றுத் தருவது எப்போதடா?#JusticeForGovindaraj
  • பண்ருட்டி மேல்மாம்பட்டு பாமக நிர்வாகி கோவிந்தராசுவின் உடற்கூராய்வை புதுவை ஜிப்மர் மருத்துவர்களைக் கொண்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது நிறைவளிக்கிறது! #JusticeForGovindaraj
  • உடலை எக்ஸ்ரே எடுக்க வேண்டும், உடற்கூறாய்வை காணொலி பதிவு செய்ய வேண்டும், மூன்றாவது தரப்பு மருத்துவர் ஒருவர் உடனிருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் ஆணையிட்டிருப்பதன் மூலம் இந்த வழக்கில் நீதி நிலைநாட்டப்படும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
  • நடந்தது கொலைதான் என்பதற்கான குறிப்புகள் முதல் தகவல் அறிக்கையில் இருக்கும் நிலையில் கொலை வழக்குப்பதிவு செய்யாமல், சந்தேக மரணம் எனப் பதிவுசெய்திருப்பது குறித்து நீதிபதி, அதிருப்தி தெரிவித்துள்ளார். இதன்பிறகாவது கொலை வழக்காக மாற்றி எதிரிகள் கைதுசெய்யப்படுவரா?
  • கடலூர் எம்பி முந்திரி ஆலையில் கொல்லப்பட்ட கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேலிடம் தொலைபேசியில் பேசினேன். உனக்கு கண்டிப்பாக நீதி பெற்றுத் தருவேன்... கலங்காதே என உறுதியளித்தேன். இந்த விஷயத்தில் அய்யாவைத் தான் நம்பியிருக்கிறேன் என்றார் அந்த தம்பி அழுதபடியே. அவரது நம்பிக்கை வீண் போகாது!

இவ்வாறு அந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டிருந்தன. ராமதாஸ் மேற்கோள்காட்டிய நீதிமன்ற உத்தரவு பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.

இதையும் படிங்க: திமுக எம்பியின் முந்திரி ஆலை தொழிலாளி மரணம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.