மாற்றான் தந்தை கொடுத்த பாலியல் தொல்லை - கண்கலங்க வைக்கும் சிறுமியின் ஆடியோ
Updated on: Nov 17, 2021, 3:50 PM IST

மாற்றான் தந்தை கொடுத்த பாலியல் தொல்லை - கண்கலங்க வைக்கும் சிறுமியின் ஆடியோ
Updated on: Nov 17, 2021, 3:50 PM IST
பாலியல் தொல்லை கொடுத்த தனது இரண்டாவது தந்தையை காவல் துறையினர் கைது செய்யாதது மன உளைச்சலாக இருப்பதாக 13 வயது சிறுமி குழந்தைகள் பாதுகாப்பு அவசர உதவி எண்ணிற்குத் தொடர்பு கொண்டு வேதனை தெரிவிக்கும் ஆடியோ வெளியாகியுள்ளது.
சென்னை: வானகரம் பகுதியைச் சேர்ந்த 34 வயது பெண், தனது முதல் கணவர் இறந்துவிட்டதால் கார் ஓட்டுநர் ஒருவரை கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். முதல் கணவருக்கு இரண்டு குழந்தைகளும், இரண்டாம் கணவருடன் ஒரு குழந்தையும் பிறந்துள்ளது.
முதல் கணவருக்குப் பிறந்த 13 வயது சிறுமியை அவரது மாற்றான் தந்தை, அருகிலிருக்கும் ஏரிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக சிறுமி தனது தாயிடம் அளித்த தகவலின் பேரில் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அநாகரீகமாக நடந்து கொண்ட போலீஸ்
புகாரின் பேரில் மாற்றான் தந்தை மீது காவல் துறையினர் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தும் மாற்றான் தந்தையை காவல் துறையினர் கைது செய்யவில்லை எனத் தெரிகிறது. இது குறித்து சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் கேட்டுள்ளார்.
அப்போது, விசாரணை நடத்த வேண்டுமானால் பணம் கொடுக்க வேண்டும் எனவும் தன்னிடம் பணமில்லாததால் காவல் நிலையத்தை சுத்தம் செய்ய வைத்ததாகவும் காவல் ஆணையரிடம் அப்பெண் புகார் அளித்தார்.
இந்நிலையில் கோவையில் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதிற்குப் பிறகு குழந்தைகள் பாலியல் சம்பந்தமான சந்தேகம் இருந்தால் உடனடியாக குழந்தைகள் பாதுகாப்பு அவசர உதவி எண் 1098 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
சிறுமியின் ஆடியோ
இதனையறிந்த பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமி அவசர உதவி எண்ணிற்குத் தொடர்புகொண்டு பேசினார். அதன் ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டாவது தந்தை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தும், இதுவரை காவல் துறையினர் அவரை கைது செய்யாதது ஏன் எனத் தெரியவில்லை என்றும் இது தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இரு முறை நீதிமன்றத்தின் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தும் காவல் துறையினர் அவரை கைது செய்யவில்லை. இதனால் உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும். தற்போது அவர் சென்னை பழவந்தாங்கலில் வேறொரு பெண்ணுடன் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தும் கைது செய்யப்படாமல் இருப்பது வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்தக் குரல் பதிவு கேட்போர் நெஞ்சை பதை பதைக்க செய்கிறது. இதற்கிடையில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: முன்விரோதம்: மொபட்டில் சென்ற சிறுவனுக்கு அரிவாள் வெட்டு - இருவர் கைது
