ETV Bharat / city

தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள்: நரேந்திர மோடி திறந்துவைக்கிறார்!

author img

By

Published : Jan 10, 2022, 3:42 PM IST

Updated : Jan 10, 2022, 5:22 PM IST

மருத்துவக் கல்லூரிகள் மோடி திறந்துவைப்பு
மருத்துவக் கல்லூரிகள் மோடி திறந்துவைப்பு

தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளையும், செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் ஜனவரி 12 அன்று பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைக்கிறார்.

சென்னை: தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளையும், செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் நரேந்திர மோடி 2022 ஜனவரி 12 அன்று பிற்பகல் 4 மணிக்கு காணொலி காட்சி மூலம் தொடங்கிவைக்கவுள்ளார்.

புதிய மருத்துவக் கல்லூரிகள் ரூ.4,000 கோடி மதிப்பீட்டுச் செலவில் கட்டப்பட்டுள்ளன. இதில் ரூ.2,145 கோடி மத்திய அரசாலும் எஞ்சியத் தொகை தமிழ்நாடு அரசாலும் வழங்கப்பட்டது.

1450 இடங்களைக் கொண்ட மருத்துவக் கல்லூரிகள்

விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் மருத்துவக் கல்வியைக் கட்டுப்படியானதாக அதிகரித்தல், சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் நரேந்திர மோடியின் தொடர்ச்சியான முயற்சி அடிப்படையில் இந்த மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன.

மொத்தம் ஆயிரத்து 450 இடங்களைக் கொண்ட புதிய மருத்துவக் கல்லூரிகள், ‘தற்போதுள்ள மாவட்ட / அவசர முதலுதவி மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கும்’ மத்திய அரசு ஆதரவிலான திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ளன. அரசு அல்லது தனியார் மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் இந்தத் திட்டத்தின்கீழ் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படுகின்றன.

செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் புதிய வளாகம்

இந்தியப் பாரம்பரியம், செம்மொழிகள் ஆகியவற்றை மேம்படுத்தி பாதுகாக்கும் பிரதமரின் தொலைநோக்குத் திட்டத்தின் அடிப்படையில் சென்னையில், செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் புதிய வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் முழுமையான நிதியுதவியைக் கொண்ட புதிய வளாகம் ரூ.24 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

இதுவரை வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டுவந்த இந்த நிறுவனம், தற்போது மூன்று தளங்களைக் கொண்ட புதிய வளாகத்தில் செயல்படும். விசாலமான நூலகம், மின்னணு நூலகம், கருத்தரங்கக் கூடங்கள், பலவகை ஊடக அரங்கு போன்றவற்றை புதிய வளாகம் கொண்டுள்ளது.

மத்திய கல்வித் துறையின்கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனம், ஆராய்ச்சி செயல்பாடுகள் மூலம், செம்மொழித் தமிழ் மேம்பாட்டிற்குப் பங்களிப்புச் செய்கிறது. இதன்மூலம் தமிழ் மொழியின் தொன்மையும், தனித்துவமும் நிறுவப்படுகிறது.

திருக்குறளை மொழிபெயர்ப்பதே நோக்கம்

இதன் நூலகத்தில் 45,000-க்கும் கூடுதலாக தொன்மையான தமிழ் நூல்கள், சேகரிக்கப்பட்டுள்ளன. செம்மொழித் தமிழை மேம்படுத்தவும், அதன் மாணவர்களுக்கு உதவவும் இந்த நிறுவனம் கருத்தரங்குகள் நடத்துதல், பயிற்சித் திட்டங்கள், படிப்பு உதவித்தொகை வழங்குதல் போன்ற கல்வி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுகிறது.

திருக்குறளை பல்வேறு இந்திய மொழிகளிலும், 100 வெளிநாட்டு மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடுவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. செம்மொழித் தமிழை உலகம் முழுவதும் பரப்புவதற்கு உகந்த வகையில், பணியாற்றும் சூழலைக் கொண்டதாக இந்தப் புதிய வளாகம் இருக்கும்.

இதையும் படிங்க: மருத்துவக் காப்பீடு வசதி தொடங்கிவைத்த ஸ்டாலின்

Last Updated :Jan 10, 2022, 5:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.