ETV Bharat / city

எதிலும் காதல்... ஆதரவு நாடும் தன்பாலின காதலர்கள்!

author img

By

Published : Feb 17, 2022, 9:12 PM IST

தமிழ்நாடு காவல்துறை அலுவலர்கள்
தமிழ்நாடு காவல்துறை அலுவலர்கள்

தமிழ்நாடு காவல் துறை அலுவலர்கள் நடைமுறை விதியில் திருநங்கைகள், தன்பாலின ஈர்ப்பாளர்கள் உள்ளிட்ட LGBTQIA சேர்ந்த நபர்களிடம் தேவையில்லாமல் தொந்தரவு செய்யக்கூடாது எனப் புதிய சட்டத்திருத்தம் அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை: மதுரையைச் சேர்ந்த இரு பெண்கள், நட்புடன் பழகத் தொடங்கி, பின்னர் அது காதலாக மாறியதால், பிரிய மனமில்லாமல் சேர்ந்து வாழ விரும்பியுள்ளனர்.

இதற்கு இருவரின் பெற்றோரும் எதிர்ப்புத் தெரிவித்து, பிரிக்க முயன்றதால், இருவரும் மதுரையிலிருந்து சென்னை வந்து, தொண்டு நிறுவன காப்பகத்தில் தங்கி வேலை தேடினர்.

இந்நிலையில், இருவரையும் காணவில்லை எனப் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கில் தங்களைத் துன்புறுத்தக் கூடாது என்றும், தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரியும் இரு பெண்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்த உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாடு உள் துறை அமைச்சகம் புதிய சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது. தமிழ்நாடு காவல் துறை அலுவலர்கள் நடைமுறை விதிகளில் 24 c சட்டப்பிரிவைச் சேர்த்துள்ளது.

அதன்படி உதவி ஆணையர், உதவி ஆணையருக்கு கீழ் பணிபுரியும் காவல் துறையினர் திருநங்கைகள், தன்பாலின ஈர்ப்பாளர்கள் என LGBTQIA பிரிவைச் சேர்ந்தவர்களைத் தேவையில்லாமல் காவல் துறையினர் தொந்தரவு செய்யக் கூடாது என்ற பிரிவைச் சேர்த்துள்ளனர்.

சட்டப்பூர்வமாகக் காவல் துறையினர் இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டு தமிழ்நாடு உள் துறை அரசிதழிலும் வெளியிட்டுள்ளது.

விசாரணையின்போது இந்த விதிமுறைகளை மீறும் காவல் துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மட்டுமல்லாது இவர்களுக்காகப் போராடும் அமைப்பைச் சேர்ந்தவர்களையும் தேவையில்லாமல் தொந்தரவு செய்யக் கூடாது என இந்தச் சட்டத் திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்று பாலினத்தைச் சேர்ந்தவர்கள், தன்பாலின ஈர்ப்பாளர்கள் உள்ளிட்டோர் சாதாரணமாகவே காவல் துறையினரால் தவறாக நடத்தப்படுவதாகவும், அது தொடர்பான பல்வேறு புகார்கள் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதுமிருந்து வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

இவர்களை காவல் துறையினர் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்தும் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்ற தரப்பில் அறிவுரை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு வளைகாப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.