ETV Bharat / city

ஒமைக்ரான் வைரஸ் தொற்றை தமிழ்நாட்டிலேயே கண்டறியலாம்

author img

By

Published : Nov 29, 2021, 4:58 PM IST

ஒமைக்ரான் வைரஸ்  தொற்றை  தமிழ்நாட்டிலேயே கண்டறியலாம்
மரபணு உருமாற்று ஆய்வகத்தின் பொறுப்பாளரும், துணை இயக்குனருமான ராஜூ

ஒமைக்ரான் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பை தமிழ்நாட்டில் கண்டறிவதற்கான வசதிகள் இருப்பதாக மரபணு உருமாற்று ஆய்வகத்தின் பொறுப்பாளரும், துணை இயக்குநருமான ராஜு தகவல் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பை தமிழ்நாட்டில் கண்டறிவதற்கான வசதிகள் இருக்கின்றன எனப் பொது சுகாதாரத் துறை இயக்குநரகத்தில் இயங்கிவரும் மரபணு உருமாற்று ஆய்வகத்தின் பொறுப்பாளரும், துணை இயக்குநருமான ராஜு தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரான் வைரஸின் வேறுபாடு

சார்ஸ் கோவிட்-2 தற்பொழுது உலகையே அச்சுறுத்திவருகிறது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களின் இயல்பு வாழ்க்கைப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கரோனா வைரஸ் பல்வேறு மாற்றங்களை அடைந்து தற்போது தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற வீரியமான வைரசாக வந்துள்ளது.

இதனைக் கண்டறிவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை உலக சுகதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ஒமைக்ரான் வைரஸ் 30 மைக்ரான் வேறுபாடு அடைந்துள்ளதாகவும், இதனை கண்டறிவதற்கு எஸ்.ஜி.டி.எஃப். என்ற முறையில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மரபணு உருமாற்று ஆய்வகத்தின் பொறுப்பாளரும், துணை இயக்குநருமான ராஜு

இது குறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநரகத்தில் இயங்கிவரும் மரபணு உருமாற்று ஆய்வகத்தின் பொறுப்பாளர் ராஜு கூறும்போது, "உலக சுகாதார நிறுவனம் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதைத் தெரிவித்துள்ளனர்.

அதனைக் கண்டறிவதற்கான வழிகாட்டுதலில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் டேக்பாத் (taqpath) கிட் பயன்படுத்தி பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். இந்தப் பரிசோதனை செய்யும்போது, எஸ் ஜீன் (s gene) தெரியாது. இந்த கிட்டில் எஸ் ஜீன், என் ஜீன் (n gene) என இருக்கும். அதில் எஸ் ஜீன் தொியாது. இதனை மட்டும் வைத்து உறுதிப்படுத்த முடியாது. அதன் பின்னர் மரபணு பரிசோதனை செய்து கண்டறிய வேண்டும்.

அறிகுறி தெரிந்தால் எளிதாகக் கண்டுபிடித்து விடலாம்

தமிழ்நாட்டில் 69 அரசு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மையங்கள் இருக்கின்றன. அவற்றில் அதிகளவில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யும் ஆய்வகங்களில் டேக்பாத் (taqpath) எனப்படும் கிட்தான் பயன்படுத்துகின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல் கூடுதலாக விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பிற்கான அறிகுறி தெரிந்தால் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.

மரபணு உருமாற்று பரிசோதனை மையத்தில் ஏழு நாள்களுக்குள் ஏழு பிரிவாக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, கூட்டங்கள் இருக்கும் இடத்தில் கண்டறியப்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் நோய் கண்டறியப்பட்டவர்களின் மூலம் எடுக்கப்பட்ட மரபணு மாற்றம் குறித்து ஆய்வுசெய்துள்ளோம். அதில் 96 விழுக்காடு டெல்டா வைரஸ் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவிலிருந்து பரவும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகளவில் பரவும் என உலக சுகதாரத் துறை நிறுவனம் கண்டறிந்துள்ளது. தமிழ்நாட்டில் வேகமாகப் பரவும் வைரஸ் வந்தாலும் அதனைக் கண்டறிந்து உடனடியாகத் தடுக்க முடியும்.

உருமாறும் வைரஸ்

வைரஸ் உருமாற்றம் அடைவது என்பது இயல்பானதுதான். வைரஸ் பாதிப்பை கண்டறிந்து அவற்றை அழிப்பதற்கு நாம் மருந்துகளைக் கண்டறிந்தாலும், அதிலிருந்து வைரஸ் மாற்றம் அடைந்து நம் மீது தாக்குதல் நடத்துவதற்கு முயற்சிக்கும். மனித உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரித்தாலும், வைரஸ் அதிலிருந்து மாற்றம் அடைந்து மனிதனின் உடலைத் தாக்கி வாழ்வதற்கு முயற்சிக்கும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஒமைக்ரான்: 'விமான பயணிகள் தவறான தகவல் அளித்தால் கடும் நடவடிக்கை'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.