'ஏ.கே. ராஜன் குழுவுக்கு நீட் குறித்த எந்தப் புரிதலும் இல்லை'

author img

By

Published : Sep 23, 2021, 10:44 AM IST

பாலகுருசாமி

ஏ.கே. ராஜனின் குழுவுக்கு நீட் குறித்த எந்தப் புரிதலும் இல்லை என்பது அவர்களின் அறிக்கை வாயிலாகத் தெரியவருவதாகக் குறிப்பிட்ட இ. பாலகுருசாமி, இதனடிப்படையில் நீட்டுக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டுவந்திருப்பது கெடுவாய்ப்பாகும் என வேதனை தெரிவித்தார்.

சென்னை: நீட் தேர்வில் உள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் தமிழ்நாடு அரசு குழு அமைத்தது. இந்தக் குழு நீட் தேர்வின் தாக்கும் குறித்து பொதுமக்களிடமிருந்து கருத்துகளைப் பெற்றது.

அதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட 165 பக்கங்கள் கொண்ட அறிக்கையை அக்குழு முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஜூலை 14ஆம் தேதியன்று சமர்ப்பித்தது. இதையடுத்து, ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ. பாலகுருசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "நீட் தேர்வுக்கு முன்பு பல்வேறு மாநிலங்களில் பல கல்வி நிலையங்கள் பிரத்யேகமாக நுழைவுத் தேர்வுகளை நடத்திவந்தன. இதனால் மாணாக்கரின் நேரம், பணம் ஆகியவை விரயமாகின. தற்போது நீட் தேர்வினால் அவை களையப்பட்டுள்ளன.

மாணக்கருக்கு நாடு முழுவதும் உள்ள எந்தக் கல்லூரியையும் தேர்வு செய்வதற்கு நேர்மையான, வெளிப்படையான முறையில் நீட் வாய்ப்பளிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்கலில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களைத் தவிர மற்ற இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களே தேர்வு செய்ப்படுகின்றனர்.

அகில இந்திய ஒதுக்கீட்டின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்வி நிறுவனங்கள் 15 விழுக்காடு இடங்களை ஒதுக்குகின்றன. இவ்விடங்களுக்கு தமிழ்நாட்டு மாணாக்கரும் போட்டியிட முடியும். நீட் வேண்டாம் என்றால் தமிழ்நாட்டு மாணக்கர் இந்த இடங்களை இழக்க நேரிடும்.

நீட் குறித்து எந்தப் புரிதலும் இல்லை

நீட் தேர்வு காரணமாகவே நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நன்கொடை வசூலிக்கும் முறை முடிவுக்கு வந்துள்ளது. நீட் தரமான மருத்துவக் கல்வியை உறுதிப்படுத்துவதுடன் இந்திய மருத்துவப் படிப்புக்கு பன்னாட்டு அங்கீகாரம் பெற்றுத் தரும் ஒரு தேர்வாக இருக்கிறது.

அதிகாரத்தில் இருப்பவர்களுக்குச் சாதகமாக தவறான விவரங்களின் அடிப்படையில் ஒரு அறிக்கையை ஏ.கே. ராஜன் குழு அளித்துள்ளது. நீட் தேர்வு தொடருமானால் தமிழ்நாட்டின் சுகாதாரத் திட்டமும், ஆரம்ப சுகாதார நிலையங்களும் பாதிக்கப்பட்டு சுதந்திரத்திற்கு முந்தைய நிலைக்குச் சென்றுவிடும் என்று கூறியிருப்பதிலிருந்து குழுவுக்கு நீட் குறித்த எந்தப் புரிதலும் இல்லை என்பது தெரியவருகிறது.

இதனடிப்படையில் நீட்டுக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டுவந்திருப்பது கெடுவாய்ப்பாகும். அதேநேரம் கற்றல் என்பதிலிருந்து பயிற்சி என்ற நிலைக்கு நீட் தேர்வு கொண்டு செல்கிறது என்பதில் மட்டும் நான் உடன்படுகிறேன். ஆனால், பயிற்சி மைய கலாசாரம் என்பது நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கு முன்பிருந்தே நடைமுறையில் இருக்கிறது" என்றார் விரிவாக.

இதையும் படிங்க: நீட் தேவையில்லை, மாநில அளவில் தேர்வு - ஏ.கே. ராஜன் குழு அறிக்கையில் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.