ETV Bharat / city

7 பேரை விடுவிக்க தீர்மானம் நிறைவேற்றும் போது தெரியவில்லையா? - நீதிபதி சரமாரி கேள்வி

author img

By

Published : Jun 5, 2020, 3:04 PM IST

சென்னை: நளினி முருகன் ஆகியோரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய போது சர்வதேச தாக்கம் குறித்து பரிசீலனை செய்யவில்லையா என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

highcourt
highcourt

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன் மற்றும் நளினியை, இலங்கையில் வாழும் முருகனின் தாய் மற்றும் லண்டனில் உள்ள தங்கையுடன் வாட்ஸ் ஆப் வீடியோ கால் மூலமாக பேச அனுமதி வழங்கக்கோரி நளினியின் தாய் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”இவர்கள் இருவரையும் வீடியோ கால் மூலம் வெளிநாடுகளில் வாழ்பவர்களுடன் பேச அனுமதித்தால் அது சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படக்கூடும் எனவும் அரசு தரப்பில் கூறப்படுவதை ஏற்க முடியாது. அதற்கான ஆதாரங்களும் இல்லை.

உறவினர்கள், நண்பர்கள், வழக்கறிஞர்களுடன் பேச சிறை விதிகளில் எந்த தடையும் இல்லை எனும் நிலையில், மற்ற கைதிகளுக்கு அனுமதி அளிப்பதுபோல், முருகன் நளினிக்கு மட்டும் அனுமதி மறுப்பது அவர்களின் அடிப்படை உரிமையை மீறிய செயல். வெளிநாடுகளில் வாழும் உறவினர்களுடன் பேச சிறை விதிகளும் தடை விதிக்கவில்லை எனும்போது, நீதிமன்றமும் அதற்கு தடை விதிக்க முடியாது” என வலியுறுத்தினார்.

இதையடுத்து நீதிபதி ஹேமலதா, சிறைகளில் அலைபேசி, சிம் கார்டு சார்ஜர் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது கரோனா காரணமாக கைதிகள் உறவினர்களுடன் பேச அலைபேசிகளை பயன்படுத்த அனுமதியளித்து அரசாணை ஏதும் பிறப்பிக்கப்பட்டுள்ளதா என அரசு தரப்பு வழக்கறிஞருக்கு கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து அரசின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாக கூறிய அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், சிறை விதிகளின்படி உள் நாட்டில் வாழும் உறவினர்களுடன் தான் பேச அனுமதிக்கப்படுகிறது எனவும், உறவினர்களுடன் தொலைபேசியில் பேசுவதை உரிமையாக கேட்க முடியாது எனவும், இது தொடர்பாக முடிவெடுக்க சிறை கண்காணிப்பாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இவ்வழக்கில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தையும் எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் கோரப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி கிருபாகரன், சர்வதேச அளவில் தாக்கம் ஏற்படும் எனக் கூறும் அரசு அவர்களை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய போது இது குறித்து பரிசீலிக்கவில்லையா எனக் கேள்வி எழுப்பினார். ஏழு பேரையும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், போனில் பேச தடை விதிப்பது நியாயமா என்றும் நீதிபதி வினவினார்.

பின்னர், வழக்கு அனைத்தையும் விட்டுவிட்டு, தந்தை மரணத்திற்கு பின் தாயுடன் மகன் பேச மனிதாபிமான அடிப்படையில் அனுமதிக்கக்கூடாதா? என கேள்வி எழுப்பிய நீதிபதி கிருபாகரன், வழக்கு விசாரணையை ஜூன் 12ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். அப்போது வெளியுறவுத்துறை அமைச்சகத்தை எதிர் மனுதாரராக சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கோரி தி.க. வழக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.