ETV Bharat / city

இலங்கைத் தமிழராக பிறந்தது என் தவறா? - தொடர்எதிர்ப்புகளுக்குப் பதிலளித்த முத்தையா முரளிதரன்

author img

By

Published : Oct 16, 2020, 4:29 PM IST

Updated : Oct 16, 2020, 10:12 PM IST

முத்தையா முரளிதரன் விளக்கம்
முத்தையா முரளிதரன் விளக்கம்

16:18 October 16

நான் இந்தியாவில் பிறந்து இருந்தால், நான் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற முயற்சித்திருப்பேன். இலங்கைத் தமிழனாக நான் பிறந்தது எனது தவறா? என முத்தையா முரளிதரன் 800 பட சர்ச்சை குறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருக்கிறார்

இலங்கைத் தமிழராக பிறந்தது என் தவறா - முத்தையா முரளிதரன் விளக்கம்
இலங்கைத் தமிழராக பிறந்தது என் தவறா - முத்தையா முரளிதரன் விளக்கம்

இலங்கையைச் சேர்ந்த தமிழ் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு  '800' என்ற பெயரில் கோலிவுட்டில் படமாக எடுக்கப்படுவதாக கடந்தாண்டு அறிவிப்புகள் வெளியாகின. இதைத்தொடர்ந்து அதில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்கயிருப்பதாகவும்  நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் பரவின. ஆனால், இதை ஆரம்பகட்டத்தில் நடிகர் விஜய்சேதுபதி தரப்பினர் மறுத்து வந்தனர்.  

இந்நிலையில் கடந்த  அக்டோபர் 13ஆம் தேதி '800' படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்கப்பதாக அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும்  மோஷன் வீடியோவும் படக்குழுவினரால் வெளியிடப்பட்டது. இது பெரும்பான்மையான தமிழ்நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியைத்தரவில்லை. மாறாக வெறுப்பினை ஏற்படுத்தியது. ஏனெனில், 2009ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த இறுதிப்போரில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காரணமாகச் சொல்லப்படும் மகிந்த ராஜபக்‌ஷவின் ஆதரவாளராக முத்தையா முரளிதரன் இருப்பதாக பெரும்பாலான தமிழ் மக்கள் கருதுகின்றனர். இதனிடையே அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு எதிர்வினையாற்றும்விதமாக, முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய்சேதுபதியை ட்விட்டரில் தமிழ் மக்கள் வசைபாடினர். இதனால்   #ShameOnVijaySethupathi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டானது.  

ட்விட்டர் தந்த கவன ஈர்ப்பால் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும், தமிழ்த்திரை பிரபலங்களும் விஜய்சேதுபதி ‘800’ திரைப்படத்தில் நடிக்கக்கூடாது என வலியுறுத்தியும், முத்தையா முரளிதரனை விமர்சித்து கண்டன அறிக்கைகளையும் பதிவு செய்தனர்.  குறிப்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் ராமதாஸ், தந்தை பெரியார் திராவிடர் கழக செயலாளர் ராமகிருட்டிணன் என ஒருபுறம் அரசியல் தலைவர்களும் மறுபுறம் இயக்குநர் இமயம் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, கவிஞர் தாமரை, நடிகர் விவேக் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் விஜய்சேதுபதி ‘800’ திரைப்படத்தில் இருந்து விலகவேண்டும் என வலியுறுத்தினர்.  

இந்நிலையில் இதற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் ஒரு அறிக்கையைப் பொதுவெளியில் பகிர்ந்தார்.  

அதில் தன்னை தமிழினத்திற்கு எதிரானவன்போல சித்தரிப்பது வேதனையளிக்கிறது என முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். இது குறித்து முத்தையா முரளிதரன் வெளியிட்ட அறிக்கையில், 'இலங்கையில் தேயிலைத்தோட்டத் தொழிலாளர்களாக எங்கள் குடும்பம் தங்களது வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பித்தது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற போரில் முதலாவதாக பாதிக்கப்பட்டது, இந்திய வம்சாவழியான மலையகத் தமிழர்கள்தான். இலங்கை மண்ணில் எழுபதுகள் முதல் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கலவரங்கள் வரை, பல்வேறு வன்முறைகளில் நாங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.  

என் ஏழு வயதில் எனது தந்தை வெட்டப்பட்டார். என் சொந்தங்களில் பலர் போரில் பலியாகினர். வாழ்வாதாரத்தை இழந்து பலமுறை நடுத்தெருவில் நின்றிருக்கிறோம்.  முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக போர் சூழ்நிலையில் இருந்த நாட்டில் நான் எப்படி கிரிக்கெட் அணியில் சேர்ந்து சாதித்தேன் என்பது பற்றிய படமே 800.  

ஐ.நா.வின் உணவுத் தூதராக இருந்தபோது, 2002ஆம் ஆண்டு முதல் LTTE-யின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் பள்ளிக்குழந்தைகளுக்கு நல்ல திட்டங்களை எடுத்துச்சென்றது முதல் சுனாமி காலம் வரை நான் செய்த உதவியை ஈழத்தமிழ் மக்கள் நன்கு அறிவர்.  

ஈழத் தமிழர்கள் வாழும் பகுதிகளில் எனது தொண்டு நிறுவனம் மூலம் குழந்தைகள் கல்வி, பெண்கள் முன்னேற்றம், மருத்துவம் எனப்பல உதவிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றேன்.  

மக்கள் நல்லிணக்கத்துக்காக ஆண்டுதோறும் 'murali harmony cup'என்ற பெயரில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தி வருகிறேன்.  

நான் இலங்கை அணியில் இடம்பெற்று சாதனைப் படைத்த காரணத்தினாலேயே  என் மீது ஒரு தவறான பார்வை இருந்து வருகிறது.  

நான் இந்தியாவில் பிறந்து இருந்தால், நான் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற முயற்சித்திருப்பேன். இலங்கை தமிழனாக நான் பிறந்தது எனது தவறா?

இவை அனைத்தையும் விடுத்து சிலர் அறியாமையாலும், சிலர் அரசியல் காரணத்திற்காகவும் என்னை தமிழ் இனத்திற்கு எதிரானவர் என்பதுபோல் சித்தரிப்பது வேதனையளிக்கிறது.  

எவ்வளவு விளக்கமளித்தாலும் எதிர்ப்பாளர்கள் யாரையும் சமாதானப்படுத்த முடியாது என்றாலும்; என்னைப் பற்றி ஒரு பக்கம் தவறான செய்திகள் மட்டுமே பகிரப்பட்டு வரும் நிலையில் நடுநிலையாளர்களுக்கும்  பொது மக்களுக்கும் விளக்கமளிக்க கடமைப்பட்டுள்ளேன்’ எனக்கூறி அந்த அறிக்கையை நிறைவுசெய்துள்ளார். 

இதையும் படிங்க: இனத்துரோகி வேடத்தில் இனப்பற்றாளரா? - ’800’க்கு வலுக்கும் எதிர்ப்பு!

Last Updated :Oct 16, 2020, 10:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.