தொடர் கொள்ளை சம்பவம்: சினிமா பட பாணியில் 3 பேர் கைது

author img

By

Published : Apr 13, 2022, 11:50 AM IST

சினிமா பட பாணியில் 3 பேர் கைது

சென்னையில் 100க்கும் மேற்பட்ட கடைகளில் கொள்ளையடித்த 3 பேரை சினிமா பட பாணியில் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை: சைதாப்பேட்டை பிள்ளையார் கோயில் தெருவில் வசித்து வருபவர் செல்வம். இவர் அதே பகுதியில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். கடந்த 6ஆம் தேதி அவரது கடையை பூட்டிவிட்டுச் சென்று மறுநாள் காலை கடைக்கு வந்து பார்த்துள்ளார்.

அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த 2 கேமராக்கள் திருடு போயிருந்தன. இது குறித்து செல்வம் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த அருண் குமார் என்ற பிங்கி, சந்துரு, வினோத் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இவர்களை பிடிக்க காவல் துறையினர் சினிமா பாணியில் நடத்திய நாடக சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது. 6 மாதங்களாக தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த மூவரும் சிசிடிவி கேமராவில் சிக்கி வந்த போதிலும், கையில் சிக்காமல் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததால் காவல் துறையினருக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.

இதனால் காவல் துறையினர் அவர்களது கும்பலில் ஊர்காவல்படையை சேர்ந்த ஒருவரை இணைத்துள்ளனர். பிறகு இந்த கும்பல் கொள்ளையடிக்க நோட்டமிடுவதில் தொடங்கி, கொள்ளையடிக்க பயன்படுத்தும் பாணி வரை ரகசியமாக காவல் துறையினருக்கு ஊர்காவல்படை காவலர் தெரியப்படுத்தி வந்துள்ளார்.

இது தெரியாமல் அவருடன் சேர்ந்து மூன்று பேரும் கொள்ளையில் ஈடுபடும் போது கையும் களவுமாக காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கடந்த 6 மாதங்களாக கைது செய்யப்பட்ட 3 பேரும் சிறிய கடையின் பூட்டை உடைத்து பல லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

குறிப்பாக இவர்கள் சிறிய கடையை மட்டுமே நோட்டமிட்டு சுமார் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்ளையடித்துள்ளனர். கடந்த மாதம் 9 கடைகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மூவருமே ஒரே கலரில் உடை அணிந்து கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.

அதுமட்டுமின்றி கொள்ளையில் ஈடுபட்டவுடன் அருகிலிருக்கும் இருசக்கர வாகனத்தை எடுத்து தப்பிச்சென்று, இன்னொரு திருட்டில் ஈடுபடும் இடத்தில் விட்டு செல்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். மேலும் இரண்டு நிமிடத்திலேயே சிறிய கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து வந்துள்ளனர்.

கொள்ளையடித்த பணத்தில் விலையுயர்ந்த போதை ஊசி மற்றும் போதை மாத்திரைகள் வாங்கி பயன்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள 2 கேமராக்கள், 1 ஹோம் தியேட்டர், தங்க மோதிரம், ரூ.3 ஆயிரம் ரொக்கம் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

கைதான அருண்குமார் என்ற பிங்கி மீது 25 திருட்டு வழக்குகளும், சந்துரு மீது 20 திருட்டு வழக்குகளும் மற்றும் வினோத் மீது 6 திருட்டு வழக்குகளும் உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: வங்கி மோசடி வழக்கு - நீரவ் மோடியின் கூட்டாளி எகிப்தில் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.