ETV Bharat / city

'குயின்ஸ் லேண்ட்... இன்னும் 2 நாள்களில் நடவடிக்கை'

author img

By

Published : Oct 19, 2021, 2:20 PM IST

அமைச்சர் சேகர் பாபு
அமைச்சர் சேகர் பாபு

குயின்ஸ் லேண்ட் யாரும் நெருங்க முடியாத இடம் கிடையாது, எனவே இன்னும் இரண்டு நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மேம்பாடு குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தலைமையில் ஆய்வுக்கூட்டம், நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அறநிலையத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளரைச் சந்தித்த சேகர்பாபு,

"திருச்செந்தூர் கோயிலைச் சுற்றி எந்த இடத்தில் நின்று பார்த்தாலும் ராஜகோபுரம் தெரியும் அளவிற்கு உயரம் குறைந்த கட்டடங்கள் கட்டுவது என முடிவுசெய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் காத்திருக்கும் அறையில், தொலைக்காட்சி, கழிப்பறை, குடிநீர் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும்.

அர்ச்சகர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுவருகிறது. கோயிலைச் சுற்றியுள்ள பனை பொருள்கள், கடல்சார் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் தற்போது உள்ளதைவிட அதிகளவில் அமைக்கப்படும்.

தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் கூறியது போலவே, தற்போது முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்றுவருகிறது. தவறு செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை உண்டு. அறநிலையத் துறை முன்னாள் அமைச்சர் தவறு செய்திருந்தால், நிச்சயம் அவரும் விசாரணை செய்யப்படுவார்.

மேலும் பூந்தமல்லியை அடுத்த பாப்பான்சத்திரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், வேணுகோபால் சாமி கோயிலுக்குச் சொந்தமான 177 ஏக்கர் நிலத்தை குயின்ஸ் லேண்ட் பொழுதுபோக்குப் பூங்கா நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக ஏற்கனவே புகார் எழுந்தது.

குயின்ஸ் லேண்ட் யாரும் நெருங்க முடியாத இடம் கிடையாது, இன்னும் இரண்டு நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு அரசுக்கு நெருங்க முடியாத இடமென்று எதுவுமில்லை" என்றார்.

இதையும் படிங்க:விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவரின் அலுவலகத்திற்குச் சீல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.