அர்ச்சகர் நியமனம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தீண்டாமையை ஊக்குவிக்கிறதா?

author img

By

Published : Aug 30, 2022, 5:27 PM IST

Etv Bharat

தமிழ்நாட்டில் ஆகம விதிப்படித்தான் அர்ச்சகர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பு வருத்தமளிப்பதாக அர்ச்சகர்கள் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த அர்ச்சகர் நியமனம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தீண்டாமையை ஊக்குவிக்கிறதா? என இந்த கட்டுரையில் காணலாம்.

ஆகமமும் - அர்ச்சகரும்:

"சாதி பிரிவுகள் சொல்லி
அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்
நீதி பிரிவுகள் செய்வார்
அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார்
சாதி கொடுமைகள் வேண்டாம்
அன்பு தன்னிற் செழித்திடும் வையம்

சாதி கொடுமைகள் வேண்டாம்
அன்பு தன்னிற் செழித்திடும் வையம்
ஆதரவுற்றிங்கு வாழ்வோம்
தொழில் ஆயிரம் மாண்புறச் செய்வோம்

கேளடா மானிடவா
எம்மில் கீழோர் மேலோர் இல்லை"

என்ற பாரதியின் பாடல் வரிகளுக்கு ஏற்ப, மனிதர்கள் யாவரும் சமம் எனில்? வழிபாட்டு உரிமையும், கருவறையில் தீபமேற்றி ஆராதிக்கன்ற உரிமையும் சமமாகவே இருக்க வேண்டும் என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் சமுதாயத்தின் அனைத்து பிரிவைச்சேர்ந்தவரும் அர்ச்சகர் ஆகலாம் என்று தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது.

மனிதம் மாறாத போது, சட்டம் அனைவருக்கும் சமம் என்ற நிலையை ஏற்படுத்தாது என்பதை போல, அர்ச்சகர் நியமனத்தில் சிலருக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளதாக சனாதானத்தை முன்னெடுப்பவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். ஏன் பார்ப்பனர்கள் அல்லாதோர் கோயில்களில் அர்ச்சனை செய்ய உரிமை இல்லையா? உரிமையாக எதை குறிப்பிடுகிறது என்பதை விரிவாகப் பார்க்க வேண்டும்.

தமிழ்நாடு அரசின் சட்டம்: பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளாய் இருந்த கருவறைத் தீண்டாமையை, அகற்றும் விதமாக, கடந்த ஆக.14, 2021அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை கொண்டு வந்தார்.

அதன்படி, அரசின் அர்ச்சகர் பயிற்சிப்பள்ளிகளில் படித்த 22 அர்ச்சக மாணவர்கள் உட்பட 57 மாணவர்களுக்கு நேர்காணல் மூலம் பணிநியமனம் வழங்கப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அர்ச்சகர் உள்ளிட்ட கோயில் பணியாளர்களுக்கான பணிவரன்முறை விதிகளின்படி அர்ச்சகர் நியமனம் மேற்கொள்ளப்பட்டது.

வழக்கும் - ஆகமமும்: இதையடுத்து, அர்ச்சகர்கள் நியமனத்தை எதிர்த்து வழக்குத்தொடர்ந்த ஆதி சைவ சிவாச்சாரியார்கள், ஆகம விதிப்படி மற்ற சாதி இந்துகள் சாமி சிலையைத் தொட்டால் தீட்டாகிவிடும் என சேசம்மாள் வழக்கின் தீர்ப்பு உள்ளது. ஆகமக்கோயில்களில் அர்ச்சகர் நியமனம் குறித்து விதி உருவாக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை. அரசின் விதிகளில் கடவுளின் மொழியான சமஸ்கிருதம் படிப்பது, எழுதுவது தொடர்பான ஆற்றல் குறித்த விதிகள் ஏதும் இல்லை.

அர்ச்சக மாணவர்களுக்கான பாடத்திட்டம் வகுக்கும் உரிமை அரசுக்கு இல்லை. அர்ச்சகர்கள் மற்றும் ஓதுவார்களுக்கான பணி வயது, சம்பளம், ஓய்வு பெறும் வயதை அரசு நிர்ணயம் செய்ய முடியாது. மரபு, பழக்கவழக்கம், ஆகமங்களின்படி எல்லோரும் அர்ச்சகர் ஆக முடியாது. பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் என்று சொல்லி நாத்திகரான பெரியாரின் பெயரில் அர்ச்சகர்களை நியமனம் செய்துள்ளது உள்நோக்கமுடையது. அர்ச்சகர் நியமனங்கள் சேசம்மாள் வழக்குகளின் தீர்ப்புகளுக்கு எதிரானது எனக் குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில், இந்து சமய அறநிலையத்துறை விதிகள் ஆகமக் கோயில்களுக்கு பொருந்தாது, குறிப்பாக பிராமண சமூகத்தின் உட்பிரிவினராய் இருந்து ஆகமக் கோயில்களில் பணியில் உள்ள அர்ச்சகர் நியமனத்தைப் பொருத்து செல்லாது. ஆகம முறை இல்லாத கோயில்களுக்கே அறநிலையத்துறையின் புதிய விதிகள் பொருந்தும் எனக்குறிப்பிட்டுள்ளது.

அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு..
அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு..

சேசம்மாள் வழக்கு: அர்ச்சகர் நிமனத்தை எதிர்த்து சேசம்மாள் தொடர்ந்த வழக்கில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டுமே கடவுளின் கருவறைக்குள் சென்று கடவுள் சிலையை தொட்டு அர்ச்சனை செய்ய உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் 1972ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

சபரிமலை வழக்கு: அரசியல் சட்ட அடிப்படையிலான முன்னுரிமை என வரும்போது ஒரு தனி நபர், குழுவின் மத உரிமை, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், தனி மனித கண்ணியம் உள்ளிட்டவைகளை முன்னிறுத்தும் அரசியல் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே செயல்பட முடியும். பிறப்பு, உடற்கூறு வகைப்பட்ட பாகுபாடுகள் அரசியல் சட்டத்திற்கு எதிரானது. தனி மனித கண்ணியத்தை, மற்ற குடிமக்களை கீழானதாகக் கருதும் எதையும் ஏற்க முடியாது. பிரிவு 26-ன் கீழான மத உட்பிரிவுகளின் உரிமை, பிரிவு 25 (2) (ஆ)-க்கு உட்பட்டே இயங்கும்.

தனி நபரின் சுதந்திரம், கண்ணியம், சமத்துவத்தை மீறி எந்த மதக்கோட்பாடு, பழக்க வழக்கங்கள், மரபுகள், நம்பிக்கைகள் இருக்க முடியாது. அவ்வாறு இருந்தால் அவை அரசியல் சட்டப்பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அரசியல் சட்டத்திற்கு அர்த்தம் உள்ளதென்றால் மதம், தனி மனித நம்பிக்கையாகவோ? மதக் கோட்பாடாகவோ? யாரையும் இழிவுபடுத்த முடியாது என 2015ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

1972 சேசம்மாள் தீர்ப்பிற்கு பிறகு சமூக, சட்ட மாற்றங்கள் நிறைய வந்துள்ளன. இவற்றை கருத்தில்கொண்டே 2018-ல் சபரிமலை வழக்கில் அனைவரும் கோயில் அர்ச்சகர ஆகலாம் என உச்ச நீதிமன்றமும் தெளிவுபடுத்தியுள்ளது. ஆதாரமற்ற ஆகம விதிப்படி தான், அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டுமா? ஏன் எனத் தெரிவிக்கிறார், அர்ச்சகர்கள் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர் ரங்கநாதன்.

.
.
.
.
அர்ச்சகர்கள் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்க தலைவர் ரங்கநாதன்
அர்ச்சகர்கள் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்க தலைவர் ரங்கநாதன்

ஏ.கே.ராஜன் குழுவின் பரிந்துரை சொல்வதென்ன? ’ஆகம விதிப்படித்தான் அர்ச்சகர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பு வருத்தமளிக்கிறது. நீதிமன்றம் குறிப்பிடும் ஆகமங்கள் எல்லாம் சிலரால் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டது. பார்ப்பனர்கள் சமுதாயத்தைச்சேர்ந்தவர்கள் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்ற வரலாற்று ஆதாரங்கள் இல்லை.

தமிழ்நாடு அரசு நியமித்த ஏ.கே.ராஜன் குழு அறிக்கையில், 28 ஆகமங்கள் சைவ கோயில்களிலும், சமஸ்கிருதத்தில் 2 ஆகமமும், பின்பற்றப்படுவதாகக் கூறுகிறார். ஆனால், ஆகம விதிப்படி வழிபாடு நடைபெறாமல் பக்தர்களை களங்கப்படுத்துவது, கோயில் சொத்துகளை கொள்ளையடிப்பது, ஆகமத்தை மீறி செயல்படுவது போன்றவை அதிகரித்துள்ளதால், அனைத்து சமுதாயத்தினரையும் உரிய பயிற்சிக்குப் பிறகு ஆலயங்களில் அர்ச்சகர்களாக நியமிக்கலாம்’ என அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் ரங்கநாதன் பரிந்துரைத்தார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு தீண்டாமையை ஊக்குவிக்கிறதா?: ’பார்ப்பனர்கள் அல்லாதோரை பெரிய கோயில்களில் ஏன் அர்ச்சகராக நியமனம் செய்ய முடிவதில்லை? என்பது சந்தேகமாகவே உள்ளது. தீண்டாமை என்பதைத் தவிர்க்க சட்டம் இயற்றிய நாம்? ஏன் ஆலயத்தில் அர்ச்சகராக மட்டும் அனுமதிப்பதில்லை. பின்னர் எப்படி தீண்டாமை நீங்கிவிட்டதாகக்கூற முடியும். சாதாரண மனிதர்கள் தலைவர்களாக உயர அனுமதிக்கும் சட்டம், தீண்டாமை என்ற சாதிய கட்டுப்பாட்டால் அனைவரையும் அர்ச்சகராக நியமிக்க முடிவதில்லை.

ஆதாரங்கள் இல்லாத ஆகமத்தை முன்னிறுத்தி தீண்டாமையை மீண்டும் உறுதிபடுத்துவதாக நீதிமன்றத் தீர்ப்பு உள்ளது. மக்களுக்காக கட்டப்பட்ட கோயில்களில் அந்த மக்களே அர்ச்சகராக முடியாத நிலை வேதனை அளிக்கிறது. கடந்த 50 ஆண்டுகால மக்களின் போராட்டமாக மாறியுள்ள அர்ச்சகர் உரிமையை மீட்டெடுக்க தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டத்தை உடனே இயற்ற வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

அனைத்து சமுதாயத்தினரும் அர்ச்சகர்களாக வர சட்டப்போராட்டம் நடத்தி வரும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன், ’நீதிமன்றங்களின் தீர்ப்பு தீண்டாமையை உறுதிபடுத்துவதாக உள்ளது. சபரிமலை கோயில் விவகாரத்தில் தனிமனித சுதந்திரம் காக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. மதச்சார்பற்ற அர்ச்சகர்கள் நியமனத்தை மாநில அரசு வரையறை செய்யலாம்.

தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: தனிமனித உரிமைப் பாதிக்கப்படுவதால், தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய மீண்டும். நீதிமன்றத்தை நாட வேண்டும். வாரிசு அடிப்படையிலான அர்ச்சகர்கள் நியமனத்தை ரத்து செய்தால், அனைத்து சமுதாயத்தினரும் அர்ச்சகராக வரும் வாய்ப்பு அமையும் என மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ஆகம விதிகளின்படி செயல்படும் கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்கள் நியமனம் செய்ய தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்குத் தொடர வேண்டும் என தமிழ்நாடு பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜனநாயகம் குறித்து முழங்கும் நமது நாட்டில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் வார்த்தைகளாக,பட்டியல் இனத்தவர்களுக்கான உரிமையைப் பெற சட்ட ரீதியாகப்போராடித்தான் பெற முடியும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து பயணிப்போம்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் அர்ச்சகர் நியமனங்களை எதிர்த்து வழக்கில் மாநில அரசுக்கு நோட்டீஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.