அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு - அமலாக்கத்துறையின் விசாரணைக்கு இடைக்காலத் தடை

author img

By

Published : May 7, 2022, 7:20 AM IST

அமலாக்கத்துறை

சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு அமலாக்கப்பிரிவு அனுப்பிய சம்மனுக்கு, இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: அதிமுக ஆட்சியில் கடந்த 2011-15ஆம் ஆண்டுகளில், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, அத்துறையில், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் வேலைகள் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார், 3 வழக்குகளை பதிவு செய்தனர்.

இந்த வழக்குகள் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இதற்கிடையில், இந்த மோசடியில் சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக, செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கப் பிரிவும் 2021ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சண்முகம் மே 9ம் தேதியும், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மே 12ம் தேதியும், அமைச்சர் செந்தில் பாலாஜியை மே 13ம் தேதி ஆஜராகும்படி, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

அமலாக்கப் பிரிவின் சம்மனை எதிர்த்து சண்முகம் தாக்கல் செய்த மனுவில், 'வழக்கில் குறியீடு செய்யபட்டதா? ஆவணங்களை அமலாக்க பிரிவுக்கு வழங்க உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில், எந்த வழக்கிற்கான விசாரணை நடைபெறுகிறது என்ற விளக்கத்தை கேட்டும், விசாரணை தொடர்பான ஆவணங்களை வழங்கக் கோரியும் அமலாக்க பிரிவுக்கு கடிதம் எழுதியும், இதுவரை எந்தப் பதிலும் இல்லை என்பதால், அமலாக்கப்பிரிவின் சம்மனுக்கு தடை விதிக்க வேண்டும்' என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் எஸ்.ஆனந்தி அமர்வு, ஏற்கனவே குறியீடு செய்யப்படாத ஆவணங்களை வழங்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், விசாரணைக்கு ஆஜராக அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி அமலாக்கப் பிரிவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.