ETV Bharat / city

வரும் அக்.12இல் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் ஊழல் வழக்கின் இறுதி விசாரணை

author img

By

Published : Sep 22, 2022, 8:50 PM IST

மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் சொத்துக்குவிப்பு வழக்குகளை ரத்து செய்யக்கோரிய முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் மீதான இறுதி விசாரணையை வரும் அக்.12ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: கோவை மாநகராட்சிகள் டெண்டர் முறைகேடு மற்றும் சொத்து குவித்ததாக தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கான வழக்குகளை விசாரணை செய்யும் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வில் இன்று (செப்.22) விசாரணைக்கு வந்தன.

அப்போது, அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் மற்றும் வழக்கறிஞர் மோகன் ஆகியோர் 2018இல் டெண்டர் முறைகேடு தொடர்பாக புகார் அளித்தது முதல் வழக்கு இந்த அமர்வுக்கு மாற்றப்பட்டது குறித்த விவரங்களை விளக்கினர்.

இதையடுத்து, மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுக்கள் மீதான இறுதி விசாரணையை அக்டோபர் 12ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். மேலும், வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: பழைய பள்ளி கட்டடங்களை புதுப்பிக்கக்கோரிய வழக்கை முடித்து வைத்த உயர் நீதிமன்றக்கிளை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.