பழைய பள்ளி கட்டடங்களை புதுப்பிக்கக்கோரிய வழக்கை முடித்து வைத்த உயர் நீதிமன்றக்கிளை

author img

By

Published : Sep 22, 2022, 7:27 PM IST

பழைய பள்ளி கட்டடங்களை புதுப்பிக்கக் கோரிய வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

தமிழ்நாட்டில் மோசமான நிலையில் உள்ள பழைய பள்ளி கட்டடங்களை இடித்து புதிய கட்டடம் கட்ட குழு அமைக்கக் கோரிய வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவளித்துள்ளது.

மதுரை: சமூகநல ஆர்வலர் செந்தில் முருகன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், "தமிழ்நாட்டில் அரசு தொடக்கப்பள்ளி, உயர் நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, அங்கன் வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், பெரும்பாலான பள்ளிகளில் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டிய கட்டடங்கள் அதிகமாக உள்ளன.

இந்நிலையில், சமீபகாலமாக பல பள்ளிக்கூடங்களின் மேற்கூரை மற்றும் கட்டடங்கள் மிகவும் மோசமான நிலையில் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் மதுரை, கோவை, திருநெல்வேலி, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கட்டடங்களின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.

ஆனால், உயரிழப்புகள் இல்லை. குறிப்பாக மதுரை கொடிமங்கலத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அந்த நேரத்தில் மாணவர்கள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கபட்டது. எனவே, தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகள், அங்கன்வாடி கட்டடங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்து அதில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களை அகற்றி புதிய கட்டடம் கட்ட கமிட்டி அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணா பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'தமிழ்நாட்டில் 5583 பள்ளி கட்டடங்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. 2021-2022ஆம் ஆண்டும் தமிழ்நாட்டில் 2,553 சேதமடைந்த பள்ளி கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளன.

2022-2023 ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு 3030 சேதமடைந்த பள்ளி கட்டடங்கள் அகற்றப்பட உள்ளன. ரூ.3745.28 கோடி நபார்டு கடன் திட்டத்தின் மூலம் 6,941 பள்ளிகளுக்கு 40,043 வகுப்பறைகள், 3,146 அறிவியல் ஆய்வகங்கள், 10,470 கழிப்பறைகள், 5421 குடிநீர் வசதிகள், 8,28,387 மீட்டர் சுற்றுச்சுவர் ஆகியவை செயல்படுத்தப்பட்டுள்ளன.

ரூ.106.78/- கோடி செலவில் 2,695 பள்ளிகளில் 32 வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள், 436 கழிவறைகள், 2270 பள்ளிகளுக்கு குடிநீர் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன”எனவுள்ளது. இதனைப் பதிவுசெய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்தனர்.

இதையும் படிங்க: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.