ETV Bharat / city

சூமோட்டோ வழக்குகள்: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பதிலளிக்க உத்தரவு

author img

By

Published : Jul 23, 2021, 7:42 PM IST

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

நாடு முழுவதும் பொருந்தக்கூடிய சுற்றுச்சூழல் விவகார வழக்குகளை டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வில் பட்டியலிட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்த மனுவுக்கு, தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: நாடு முழுவதும் பொருந்தக்கூடிய அல்லது இரு மாநிலங்களுக்கு இடையிலான சுற்றுச்சூழல் விவகாரங்கள் தொடர்பாகத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கும் வழக்குகளை (சூமோட்டோ) டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வில் பட்டியலிட வேண்டும் என்று தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு ஜூன் 12ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்துசெய்யக் கோரி மீனவர் நலச் சங்கம் சார்பில் செல்வராஜ்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார். அந்த மனுவில், "சுற்றுச்சூழல் தொடர்பான குறைகளுக்கு மக்கள் நிவாரணம் பெறுவதற்கு நாடு முழுவதும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ஐந்து அமர்வுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு பிறப்பித்துள்ள இந்த உத்தரவு, தென் மாநில மக்கள் நீதி பெறுவதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது மக்கள் வழக்குத் தொடர்பாக டெல்லிக்குப் பயணப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவர்.

இது தேசிய பசுமைத் தீர்ப்பாய சட்டங்களுக்கு விரோதமானது. எனவே இந்த உத்தரவைத் தடைசெய்ய வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதிகள் சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் இது தொடர்பாக ஜூலை 30ஆம் தேதிக்குள் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வும், ஒன்றிய அரசும் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவு நாடு முழுவதும் பொருந்தும் - உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.